மேகத்தின் கண்ணீர்
பச்சை பசேல் என்று
புளகாங்கிதம் நீ தந்தாய்,
பலமுறை அறுவடையில்
பசி நீ தீர்த்து வைத்தாய்;
வருணனின் கோபத்தில்
கருமேகம் பின் தங்க
வாடி வதங்கும் பயிரை
பலியாக நீ வென்றாய்;
கடன் பெற்றோர் மனம் போல
என் மனம் தள்ளாட
வறுமையிலும் தன்மானம்
தலை தாழ மறுத்துவிட,
வாடும் கொடுமையில்
வறுமையின் துயரத்தில்
யாதும் நான் துணிந்தேன்
பாவம்தனை நான் மறந்தேன்;
மழலைகள் தள்ளாட
பசியினால் அவை வாட,
தாபங்கள் தலை தூக்க
விஷம்தனை நான் தந்தேன்;
துடிப்பும் துயரமும்
விஷம் தந்த வேதனையும்
மருண்ட கண்களில்
உலகம் இருண்டுவர,
கருமேகமும் கண் கலங்கி
கண்களில் நீர் மல்க
இதுவா நேரம், உந்தன் நீர்
கீழ்நோக்கி இறங்கி வர?