மேகத்தின் கண்ணீர்


பச்சை பசேல் என்று
புளகாங்கிதம் நீ தந்தாய்,
பலமுறை அறுவடையில்
பசி நீ தீர்த்து வைத்தாய்;

வருணனின் கோபத்தில்
கருமேகம் பின் தங்க
வாடி வதங்கும் பயிரை
பலியாக நீ வென்றாய்;

கடன் பெற்றோர் மனம் போல
என் மனம் தள்ளாட
வறுமையிலும் தன்மானம்
தலை தாழ மறுத்துவிட,

வாடும் கொடுமையில்
வறுமையின் துயரத்தில்
யாதும் நான் துணிந்தேன்
பாவம்தனை நான் மறந்தேன்;

மழலைகள் தள்ளாட
பசியினால் அவை வாட,
தாபங்கள் தலை தூக்க
விஷம்தனை நான் தந்தேன்;

துடிப்பும் துயரமும்
விஷம் தந்த வேதனையும்
மருண்ட கண்களில்
உலகம் இருண்டுவர,

கருமேகமும் கண் கலங்கி
கண்களில் நீர் மல்க
இதுவா நேரம், உந்தன் நீர்
கீழ்நோக்கி இறங்கி வர?

எழுதியவர் : கல்கத்தா சம்பத் (18-Apr-11, 5:21 pm)
சேர்த்தது : sampath kolkata
பார்வை : 295

மேலே