நம் தேசம் போற்றுவோம் வளர்ப்போம் மண்பயனுறவேண்டும் கவிதைப்போட்டி

( மண்பயனுற வேண்டும் கவிதைப் போட்டி )
நம் தேசம் போற்றுவோம் வளர்ப்போம்
பாவலர் கருமலைத்தமிழாழன்

முக்கடலால் சூழ்ந்துள்ள இந்த நாட்டை
முற்றுகையால் நெரிக்கிறது ஊழல் கைகள்
தக்கபடி நாம்வெட்டி நேர்மை ஆட்சித்
தடந்தோளால் பாதுகாத்து வளர்ப்போம் போற்றி !

மதச்சார்பு இல்லையெனும் இந்த நாட்டில்
மனப்பகையை வளர்க்கிறது மடத்துப் பேய்கள்
மதம்பிடித்த பேய்முடியை மரத்தில் சாத்தி
மணிநாட்டை மனிதத்தில் வளர்ப்போம் போற்றி !

ஞானிகள்தம் பிறப்பிடமாம் இந்த நாட்டின்
ஞானத்தை அயல்நாட்டில் அடகு வைத்தார்
தீனிக்குச் சென்றவரை அழைத்து வந்து
திறமைகளை மதித்துநாட்டை வளர்ப்போம் போற்றி !

நீர்வளமும் நிலவளமும் குவிந்த நாட்டை
நீர்பெருக்கு வறட்சியாலே அழிய விட்டார்
நீர்இணைத்து நிலம்உழைத்து இயற்கை காத்து
நிறைநாடாய் இளைஞராலே வளர்ப்போம் போற்றி !

அறிவியலின் வளர்ச்சியினை ஆக்க மாக்கி
அதர்மமின்றி நீதிநேர்மை நெறியில் நின்று
குறிக்கோளாய்ப் பொதுநலத்தை நெஞ்சில் ஏற்றுக்
கூடியொன்றாய் நம்நாட்டை வளர்ப்போம் போற்றி !

எழுதியவர் : பாவலர் கருமலைத்தமிழாழன் (5-Feb-15, 7:23 pm)
பார்வை : 732

மேலே