புருவகாலம் 3

தன்னிச்சையாக எந்த மாறுதலும் இல்லாமல் மனிதர்களின் கண்டுபிடிப்புகளாலும் அபரிமிதமான வளர்ச்சியினாலும் பாதிக்கபட்டு செயலிழந்து கிடப்பது பண்பாடும் கலாச்சாரமும் மட்டும் அல்ல, இளமை காலத்தின் இனிய ஞாபகத்தை இழந்து தவிக்கிற மனங்களும்தான்.
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் அவன் வாழ்ந்த மண்ணோடும் காலத்தோடும் பின்னி பினைந்தல்லவா கிடக்கிறது. அப்படித்தான் என்னுடைய இன்பத்தின் இன்னொரு கரையில் சிறு வயது ஞாபகம் வந்து வந்து அலையடிக்கிறது.
ஒவ்வொரு நாளின் பொழுதிலும் பள்ளி முடித்தகையோடு கொண்டுசென்ற என் புத்தக கட்டுகளை சிதிலம் சிதிலமாய் கீற்றை சுமந்து நின்ற எங்கள் வீட்டின் கிழக்கு பக்க சுவற்றுக்கு தாரை வார்த்தபடி வீசிவிட்டு சட்டை பொத்தான்களை கூட போட்டுக்கொள்ள மறந்து ட்ட்டர்ர்ர்ர்ர்ர்என விளையாட பறக்கும் நேரத்தில் அம்மா ஊட்டிய ஒரு கை சோறு கொடுக்கும் ருசி எந்த தேசத்து பர்கரும் கொடுக்கவில்லை எனக்கு.
பழுத்த வானத்தின் ஓரமாய் பொழுதுகள் எங்கும் பட்டாம் பூச்சிக்காய் அலைந்து திரிந்து விட்டு ஊர் திரும்பும் வழியில் ஓணான் பிடிக்க ஓடும் கால்களுக்கு யார் சொல்லி தந்தது தென்னங்கீற்றின் ஒலைஎடுத்து நாரெடுக்க? இன்று வரை புரியவில்லை....அது ஒரு மந்திர காலம் என்பதை.
நினைத்த நேரத்தில் வந்து சேரமுடியாத தூரத்தில் நான் நலமோடு இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் என் கிராமத்து மக்களுக்கு நான் எப்படி சொல்வேன்...
என் சிந்தனைகள் மழை காலத்தின் பசுமையில் அப்பா அழைத்து சென்று காட்டிய வயல்வெளிகளின் சில்வண்டுகளிடமும், நண்பர்களோடு சேர்ந்து உயிர்வதை செய்கிறேன் என்பதே தெரியாமல் நான் கொன்றுபோட்ட சிட்டுக் குருவிகளின் இறகுகளிடமும் சிக்கியிருக்கிறதென்று.
கனவுகளில் கூட நான் இன்னமும் பின்தங்கிதான் இருக்கிறேன் நண்பர்களே. அதே பழைய ஞாபகம், அதே பழைய நண்பர்கள், அதே பழைய பள்ளிக்கூடம், அதே பழைய வயல்வெளிகள் என....ஆனால், உண்மையில் அப்படியல்ல. எல்லாம் கடந்து கான்கிரீட் சுவர்கள் முளைத்துவிட்டன கிராமத்தில். நான் நற்றேடுத்துப் போட்ட வயல்களெல்லாம் வந்தேறிகளின் வசம் சிக்கி சீரழிந்து கிடக்கின்றன.
ஆர்வமாய் பாடம் கவனிக்கும் நேரத்தில் வயலில் ஆடு மேய்கிறதா என பார்க்க அனுப்பும் என் ஆசிரியர் சிவப்ரகாசம் ஒருபக்கம், மதியம் எத்தனை பிள்ளைகளுக்கு முட்டைக் கொடுக்கலாம் குழம்புக்கு என்ன காய்கள் வாங்கலாம் என்று கணக்கு போட்டபடி உட்கார்ந்த இடத்திலேயே தலை வைத்து தூங்கும் எங்கள் பள்ளியின் பொறுப்பாளர் ஜெயராமன் ஒருபக்கம் என...
தென்னை மரங்களின் இடுக்கில் தலை நீட்டி நிற்கும் என கிராமத்தின் விடிவெள்ளிகளை உருவாக்கிய அந்த அற்புத பிரதேசம்...இன்னும் என மண கண்ணிலேயே கிடக்கிறது.
மழையின் தீர்க்கத்தில் ஒழுகும் கொட்டகையிலிருந்து என் மாடுகளை நான் இரவின் நேரம் மட்டும் இன்னொரு வீட்டில் கட்டியிருந்த போது அப்பாவுக்கும் அண்ணன்களுக்கும் தூக்கமில்லாது போக எல்லோரும் உறங்கிய பின்பு தாங்க முடியாத தாய்மையோடு பதறி தவித்து விளக்கெடுத்து சென்று பார்த்துவிட்டுவரும் அம்மாவை என் மாடு மறக்காமல் அவருக்கு மட்டும் ஒரு தனி பாசத்தை காட்டும்.
ஐப்பசி குளிரின் நடுக்கத்தில் தடதடத்தபடி தொடை நடுங்கி தரையோட்டி வெப்பம் தேடிக்கொண்டே குட்டிபோடுவதற்க்கு தயாராய் இருந்த என் கொடி ஆடுகளில் ஒன்றை எங்களோடு அழைத்துச்சென்று இரவு முழுதும் பாதுகாப்பாய் வைத்திருந்து தூக்கத்தை தூக்கி எறிந்துவிட்டு விடியலின் ஜாமத்தில் பத்திரமாய் பிரசவம் பார்த்த கதையை இன்று வரை என்னால் மறக்க முடிவதில்லை.
இந்த நகரத்தின் நரகத்தில் ஏதோ ஒரு அவசரத்தில் பார்த்த நண்பருக்கு மனம் கோணாதபடி ஒரு முறை சிரித்து என்ன பேசுவதென்றே தெரியாமல் நலம் விசாரித்து மீண்டும் பார்க்கலாம் என விடை பெரும் போது வந்துவிடுகிறது அந்த பாலியத்தின் வீதிகளில் நடை பழகிய நாட்களின் ஞாபகங்கள்.
உங்களுக்கும் எனக்கும் இந்த உலகில் இருக்கிற ஒரே பகிர்வு இந்த நினைவுகள் மட்டும்தான். கடந்து போன வாழ்க்கையில் இருந்து தான் நாம் ஒவ்வொன்றையும் கற்று கொண்டிருக்கிறோம்.
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் அவன் வாழ்ந்த மண்ணோடும் காலத்தோடும் பின்னி பினைந்தல்லவா கிடக்கிறது. என்னுடையதை நான் எழுதிவிட்டேன். உங்களுடையவைகளை நீங்கள் எழுதிவிடுங்கள் யாராவது படித்து திருப்திபட்டுக் கொள்ளட்டும்.