அமுதா

"உங்க காதலன் சந்துருவையும் அவருடைய நண்பர் மூர்த்தியையும் கொலை செய்த குற்றத்துக்காக உங்களைக் கைது பண்றோம் மிஸ்.மீரா.."
20 நாட்களுக்கு முன்பு...
"ஆன் த வே மீரா..வில் பி தெர் இன் ஜஸ்ட் 15 மினிட்ஸ்..."
"........."
"நம்பும்மா வந்துட்டே இருக்கேன்..சீக்கிரமா வந்துர்றேன்..."
"என்னடா , செம பாராட்டு மழைல நனையிற போல.."
"டேய் , அவ பர்த்டேக்கு நைட்டு 12 மணிக்கு முதல் முதலா நான்தான் அவளை விஷ் பண்ணனும்னு ஆசைப் படுறா..இதைக் கூட நிறைவேத்தி வெக்கலைன்னா நானெல்லாம் என்னடா காதலன்.."
"சரி சரி வேகமா போ , ஆமா என்ன கிஃப்ட் வாங்கினே.."
சந்துரு அந்த செயினை எடுத்துக் காட்ட , மூர்த்தி ஆச்சரியத்தில்,"டேய் , இது எப்போ நடந்துது.."
"இன்னிக்குக் காலைல தான்.."
"ம்ம்..குடுத்து வெச்ச மகராசன்..நடத்து..இந்தா அப்படியே இதையும் ரெண்டு பெக் உள்ள விட்டுக்கோ..காதலியோட பர்த்டேக்கு தண்ணி அடிக்காதவனெல்லாம் என்னடா காதலன்..."
"ஹா ஹா சியர்ஸ்.."
"ஹேப்பி பர்த்டே டு மை டியர் டார்லிங் மீரா.."
கார் பறந்து கொண்டு இருந்தது தன்னை மறந்த போதையில்..
திடீரென்று சற்றும் எதிர்பாராமல் அது நடந்தது..
"ஹே ஹே ஹே பாத்து பாத்து பாத்து.."
நான்கு நாட்கள் கழித்து..
"பாத்துப் போயிருக்கலாமில்ல.."
"எப்படி நடந்துதுன்னே தெரியல மீரா..கண்ணிமைக்கற நேரத்துல அந்த லாரி வந்து மோதிடுச்சு.."
"எப்பவும் போல தண்ணி அடிச்சுட்டுப் போயிருப்பே .."
"இல்ல மீரா..நான்தான் உன் மேல சத்தியம் பண்ணிருக்கேனே தண்ணி அடிக்க மாட்டேன்னு.." கெஞ்சலாக..
"ம்ம்..மூர்த்தி எங்கே..அவனுக்கு என்னாச்சு..?"
"அவனுக்குச் சின்ன சிராய்ப்பு தான்..டிஃபன் வாங்கப் போயிருக்கான்.."
"ம்ம்..எப்பவும் கார்ல தானே போவீங்க..இன்னிக்குன்னு பாத்து பைக்குல போயிருக்கீங்க..ஆனா நல்ல வேலை..உயிருக்கு ஒண்ணும் ஆபத்து இல்லை..உடைஞ்சு போன கால் சரி ஆகணும்னா குறைஞ்சது 15 நாளாவது பெட் ரெஸ்ட்ல இருக்கணும்னு டாக்டர் சொல்லி இருக்கார்...புரிஞ்சுதா..டிஸ்சார்ஜ் ஆன கையோட அந்த மூர்த்தி கூட சேர்ந்துக்கிட்டு ஊரைச் சுத்த ஆரம்பிச்சுடாதே..உன் அப்பாவுக்கு இன்ஃபார்ம் பண்ணிட்டியா சந்துரு...?"
"சொல்லலை..சொன்னா என்ன நேர்லையா கிளம்பி வந்துடப் போறார்...ஒரு ஃபோன் பண்ணி , டேக் கேர்னு சொல்லுவார்..என்னைக் கேர் பண்ணத்தான் நீ இருக்கியே..." சிணுங்கலாக...
"அப்படீங்களா சார்..இன்னும் ஐந்து நாளைக்கு நான் ஊர்ல இருக்க மாட்டேன்..முன்னாடியே சொன்னேன் இல்ல..என் சித்தி பொண்ணுக்குக் கல்யாணம்..டிஸ்சார்ஜ் டேட் அன்னைக்கு வரேன்.."
"சரி சரி..ஊருக்குப் போயிட்டு ஃபோன் பண்ணு.. உங்க அத்தை பையனைப் பார்த்த உடனே என்னை மறந்துடாதே.."
"டேய் டேய்..எல்லாரும் உன்னை மாதிரியே இருப்பாங்களா..என் பிறந்தநாள் அன்னைக்கு நீ வருவே வருவேன்னு அடுத்த நாள் காலைல வரை எதிர்பாத்துட்டு இருந்தேன் ..ஆனா நீ கடைசி வரை வரவே இல்ல..எங்க போனைன்னே தெரியல.."
"மன்னிச்சுடு மீரா...அன்னைக்கு சிச்சுவேஷன் அந்த மாதிரி ஆய்டுச்சு.."
"உன்கூட பேசவே கூடாதுன்னு இருந்தேன்..போனா போகுது பாவம் பையன்னு தான் வந்தேன்..கிளம்பறேன்..பை "
சிரித்துக் கொண்டே மீரா கிளம்பிப் போனதும் , நீண்ட யோசனையில் மூழ்கிப் போனான் சந்துரு...
யோசனையைக் கலைத்தது மூர்த்தியின் குரல்..
"மீரா வந்தா போலிருக்கே..கீழ பாத்தேன்..ரணகளத்திலையும் ஒரு கிளுகிளுப்பு கேக்குது உனக்கு...ம்ம்.."
"டேய் போடா.." , தலையணையால் அடி வாங்கினான் மூர்த்தி..
சிரித்துக் கொண்டே இருந்தாலும் இருவர் முகத்திலும் ஒரு கலவரம் பற்றி இருந்தது..
மீரா , சித்தி பெண்ணின் திருமணத்திற்காகத் தன் சொந்த ஊருக்குக் கிளம்பிப் போயிருந்தாள்..ஐந்து நாட்கள் கழித்துத் திரும்புவதாகச் சொல்லிச் சென்ற மீராவுக்கு , இரண்டே நாட்களில் மூர்த்தியிடம் இருந்து ஃபோன்...
உடனே கிளம்பி வந்தாள் மீரா...
"என்ன ஆச்சு மூர்த்தி.." பதட்டமாக..
அதே பதட்டத்தோடு மூர்த்தி , "ICU ல இருந்து ரூமுக்கு மாத்துறதுக்காக வீல் சேர் ல வெச்சு நர்ஸ் கூட்டிட்டுப் போயிருக்காங்க..யாரோ பேஷண்ட் கூப்பிட்டாங்கன்னு போயிட்டு வந்து பார்த்தா , படில உருண்டு கீழ விழுந்து கிடந்தானாமா..எழுந்து நடக்க ட்ரை பண்ணி இருப்பான்னு நினைக்கறேன்..ஸ்லீப்பிங் டோஸ் குடுத்து இருக்காங்க..தூங்கிட்டு இருக்கான்.."
"என்ன நடக்குது மூர்த்தி..."
"புரியலை மீரா.." , மூர்த்தி மீராவின் பார்வையைத் தவிர்த்தான்..அவன் ஏதோ ஒன்றைத் தன்னிடம் இருந்து மறைப்பதை மீரா உணர்ந்த்தாள்..
"நான் இங்கேயே இருந்து பாத்துக்கறேன்.."
"இல்ல வேண்டாம் மீரா..நீ இங்க இருந்தா சரியா வராது..ஏதாவது எமெர்ஜென்சி ன்னா கூப்பிடுறேன்..இப்போ நீ கிளம்பு.."
"சரி, பாத்துக்கோ.." , கவலையோடும் ஒரு விதக் குழப்பத்தோடும் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றாள்..
மீண்டும் மீரா ஊருக்குச் சென்று விட்டு , டிஸ்சார்ஜ் நாள் அன்று திரும்பி வந்தாள் , "என்ன சார் திரும்பவும் ஏதாவது ஸ்டண்ட் வேலை செஞ்சீங்களா , இந்த , கையாலேயே நடக்குறது , ஜன்னல் வழியா எகிறிக் குதிக்கிறது இந்த மாதிரி..?" கிண்டலாக..
"ஏய் அடி வாங்கப் போறே இப்போ.."
லக்கேஜ்களைப் பேக் பண்ணிக் கொண்டே மீரா , "சரி கிளம்பலாம்.."
"மீரா ஒரு நிமிஷம்.."
தன் பாக்கெட்டில் இருந்த அந்தத் தங்கச் செயினை எடுத்து மீராவின் கழுத்தில் அணிவித்தான் சந்துரு..
"ஹேப்பி பர்த்டே மை ஸ்வீட் ஹார்ட்.."
"ஹே..என்ன திடீர்னு.."
"அன்னைக்கே குடுக்கணும்னு நினைச்சேன்..ஆனா , சூழ்நிலையே சரி இல்லையே..அதான்.."
"தட்ஸ் சோ ஸ்வீட்...சரி போலாம்.."
அறை வாசலில் ஒரு நொடி தடுமாற்றத்தோடு நின்ற மீரா , திரும்பி அறைக்குள் பார்த்தாள்...ஏதோ ஒரு வித்தியாசத்தை , ஏதோ ஒன்றை அவள் உணர்ந்தாள்...
ஏதோ ஒன்று..
என்ன அது...
சந்துருவை அவன் வீட்டில் விட்டுவிட்டு யோசனையுடனே வீடு வந்து சேர்ந்தாள்...ஏதோ ஒரு அசவுகரியத்தை அவள் உணர்ந்து கொண்டே இருந்தாள்..அவள் சாதாரணமாக இல்லை என்பது அவளுக்கு நன்றாகத் தெரிந்தது..ஆனால் , என்ன நடக்கிறது..?
குழப்பத்துடனே இருந்தவள் , டிவியைப் போட்டாள்..
"முக்கியச் செய்தி : அடையாளம் தெரியாத ஒரு பெண்ணின் உடல் அழுகிய நிலையில் கண்டுபிடிப்பு...பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப் பட்டுள்ளது என்று போலீசார் அறிவிப்பு..."
ஏற்கனவே குழப்பத்தில் இருந்தவளுக்கு , அழுகிய பிணத்தைப் பார்த்த மாத்திரத்தில் குடலைப் பிரட்டிக் கொண்டு வாந்தி வர , எழுந்து வாஷ் பேசினுக்கு ஓடினாள்..
சிறிது ஆசுவாசப் படுத்திக் கொள்ள சோஃபாவில் சரிந்திருந்தாள்..சிறிது நேரம் கழித்து , வாசல் கதவைத் தாழிட்டு விட்டுக் குளிக்கப் போனாள்..
ஷவரைத் திருகி ஜில்லென்ற நீரில் நனைய மனம் சற்று நிம்மதி அடைந்தது...
சட்டென்று ஷவரில் இருந்து தண்ணீர் வருவது நின்று போக , கண் திறந்து பார்த்தவள் , அங்கு கண்டது , ஷவரின் நாசிலை அழுத்திப் பிடித்தவாறு , ஷவர் பைப் மேல் கால்களை மடக்கி , இவளையே வெறித்துப் பார்த்தபடி உட்கார்ந்து இருந்தது , அந்த அழுகிப் போன பெண் பிணம்...!!!
குலைநடுங்க , நெஞ்சடைத்து மூச்சு ஒரு நொடி நின்று போக , தபதபவென்று பின்னால் வந்து சுவரில் முட்டி மோதி , பொத்தென்று தரையில் உட்கார்ந்தாள் மீரா..
ஷவரின் மேல் உட்கார்ந்து இருந்த அது , சாவகாசமாய் பைப்பைப் பிடித்து இறங்கி வந்து , அவளுக்கருகில் குதிகாலிட்டு அமர்ந்தது...
அவ்வளவு அருகில் அதைப் பார்த்த மாத்திரத்தில் ,கால்களை மடக்கி , கைகளைத் தரையில் நெட்டித் தள்ளி , சுவரோடு ஒட்டிக்கொண்டாள் மீரா..அவளது கண்கள் கிட்டத்தட்டப் பிதுங்கி வெளியே வந்து கொண்டிருந்தன...
கையை நீட்டி , அவளது கழுத்தைத் தொடப் போனது , அது..
"ஆஆஆஆ ....."
வீறிட்டுக் கிளம்பிய அழுகை வெடித்துக் கொண்டு வெளியே வந்தது மீராவுக்கு...
கைகளுக்குள் முகத்தைப் புதைத்துக்கொண்டு அழுது கதறியவள் , மெல்ல நிமிர்ந்து பார்த்தபோது , அது அங்கு இல்லை...
எங்கே போனது..
கற்பனையா...?
இல்லை கனவா..?
வியர்த்துக் கொட்டியது..
மெல்ல எழுந்து ஷவரின் மேல் பார்த்தாள்...அங்கு , அது இல்லை..
ஹ ..கற்பனைதான்..நிம்மதிப் பெருமூச்சு ஒன்றை விட்டுக் கொண்டு உடையை மாற்றிக்கொண்டு கட்டிலில் வந்து விழுந்தாள்..
அசதியிலும் நடுக்கத்திலும் இருந்தவள் ,அப்படியே தூங்கிப் போனாள்...எவ்வளவு நேரம் தூங்கி இருப்பாள் என்று தெரியவில்லை...
திடிரென்று , ஏதோ விந்தையாய் வித்தியாசமாய் ஒரு சத்தம் கேட்டு விழித்துப் பார்த்தவளுக்கு , நாக்கு வெளியே தள்ளி நரம்புகள் விறைத்துப் போனது...
கட்டிலில் இருந்து உருண்டு கீழே வந்து சுவரோடு போய் ஒட்டிக் கொண்டு , நிமிர்ந்து பார்த்தாள்..
அது , மின்விசிறியில் தலைகீழாய்த் தொங்கிக் கொண்டு , மின்விசிறியின் வேகத்துக்கு இணையாய் சுற்றிக் கொண்டு இருந்தது...!!
கை கால்கள் விறைத்துக் கொள்ள , வெளிறிப் போய்ப் பார்த்துக் கொண்டு இருந்த மீரா , மெல்ல நகர்ந்து வெளியே ஓடிப் போய் விட அறைக்கதவின் அருகே செல்ல , ஒரு நொடிப் பொழுதில் சரக்கென்று அது , கதவின் அருகில் அவள் முன் வந்து நின்று , தலை சாய்த்து கண்கள் உருட்டிச் சிரித்தது...
நெஞ்சைப் பிடித்துக் கொண்டு பொத்தென்று கீழே விழுந்த மீரா , மூலையில் இருந்த கப்போர்ட் அருகில் போய் ஒடுங்கிக் கொண்டாள்..
அது , அவள் அருகில் வந்து நின்று , முறைத்துப் பார்த்தது , ஏளனமாய்...
இதற்கு மேல் தப்பிக்க முடியாது என்பதை உணர்ந்த மீராவுக்கு வயிறு , எலும்போடு ஒட்டிக் கொள்ள , வார்த்தைகள் வெறும் முனகல் சத்தமாய் வந்து விழுந்தது , "யா..யார்..யார் நீ..?"
"அமுதா..
அமுதாடி.." , வீடதிர கர்ஜித்தது...
.......................................................................................................................................................................................................
"ஹேப்பி பர்த்டே டு மை டியர் டார்லிங் மீரா.."
கார் பறந்து கொண்டு இருந்தது , தன்னை மறந்த போதையில்..
திடீரென்று , சற்றும் எதிர்பாராமல் அது நடந்தது..
நிலை மறந்த போதையில் மிதந்து கொண்டிருந்த கார் , சாலை ஓரம் நடந்து போய்க்கொண்டு இருந்த அந்தப் பெண்ணின் மேல் போய் மோதியது..
"ஹே ஹே ஹே பாத்து பாத்து பாத்து.."
கண்ணிமைக்கும் நேரத்தில் , தூக்கியெறியப்பட்ட அந்த பெண் , சாலையின் மறுபக்க ஓரமாய்ப் போய் முட்புதருக்கு நடுவில் விழுந்தாள்..
சர்ரென்று காரை அழுத்தி நிறுத்திய சந்துருவும் மூர்த்தியும் , காரிலிருந்து இறங்கி தடதடவென்று ஓடி வந்தனர்...
ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்தப் பெண்ணைப் பார்க்க , கிட்டத்தட்ட மயக்கம் வந்தது இருவருக்கும்...குனிந்து உற்றுப் பார்த்தார்கள்..உயிர் இருந்தது..நெஞ்சு மேலும் கீழும் தூக்கி தூக்கிப் போட , துடித்துக் கொண்டு இருந்தாள்..
"டேய் , என்னடா பண்றது .." , பீதியில் மூர்த்தி..
"ஹாஸ்பிட்டலுக்கு தூக்கிட்டுப் போலாண்டா.."
"வேண்டாண்டா..போலீஸ் கேஸ் ஆய்டும்..மாட்டினோம் ..அவளோதான்.." சற்றும் பீதி குறையாத குரலில்...
யாரும் இல்லாத அந்த நடுநிசிச் சாலை , இருவருக்குள்ளும் கலவரத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது...
"அப்புறம் என்னதாண்டா பண்றது..சொல்லிதொலைடா.." , சந்துரு..
"கொன்னுறலாம்..."
"டேய்.....!!" , கலவர குரலில்..
"வேற வழி இல்லடா..யாராவது வர்றதுக்குள்ள சீக்கிரமா இந்த இடத்தை விட்டுப் போயாகனும்.."
கலவரமாய் மூர்த்தியைப் பார்த்தவாறே வழிந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டு மண்டியிட்டு அமர்ந்து , சந்துரு அவளது கழுத்தை நெறித்தான்..
அவள் , துடிதுடித்து அவனது தலைமுடியைப் பற்றி இழுத்து அவனது சட்டையைக் கிழித்தாள்..
அவளது கழுத்து நரம்பு துடிப்பதையும் நாக்கு வெளித் தள்ளுவதையும் பார்த்து நடுங்கிப் போன சந்துரு , சட்டென்று விலகி ஓடித் தள்ளி நின்றான்..
"டேய் , இவன் ஒருத்தன்.." , மூர்த்தி , சலித்தவாறு திட்டிக்கொண்டே , அருகில் இருந்த ஒரு கல்லை எடுத்து அவள் தலையில் ஒரே போடாய்ப் போட்டான்..
உருத்தெரியாமல் சிதைந்து போனாள் , அவள்...
கடகடவென்று இருவரும் ஓடிச்சென்று காரில் ஏறிப் பறந்தார்கள்..
சிறிது தூரம் கடந்ததும் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டே நெஞ்சில் கை வைத்தான் சந்துரு...அப்போது தான் கவனித்தான்..
அய்யோ...!! சட்டைப் பாக்கெட் கிழிந்து இருந்தது..மீராவுக்காக வாங்கிய செயினைக் காணவில்லை..
எங்கே .... எங்கே ....
அய்யோ ...
ஒரு வேளை அந்த இடத்தில் எங்காவது தவறி விழுந்து இருக்குமோ..யார் கண்ணிலாவது அது பட்டுவிட்டால்..யார் கையிலாவது அது சிக்கிக் கொண்டால்...?
பதறிப் போன உதறலோடு , "டேய் டேய் , வண்டிய திருப்பு ,,திருப்புடா.. செயினைக் காணோம்டா..சீக்கிரம் சீக்கிரம்.."
"டேய் என்னடா சொல்றே..எங்கடா விட்டே அதை..இப்போ திரும்ப அந்த இடத்துக்குப் போய் யார் கண்ணிலாவது பட்டா மாட்டிக்குவோமேடா...!!!"
"இப்போ திரும்ப போகலைன்னா கண்டிப்பா மாட்டிக்குவோம்டா..வண்டியைத் திருப்பித் தொலைடா பரதேசி..."
மீண்டும் அந்த இடத்திற்கு ஒடிச் சென்று செயினைத் தேடினர்..எங்கேயும் காணவில்லை..
சட்டென்று சந்துரு உற்று கவனிக்க , அது அந்தப் பெண்ணின் வலது கையில் மின்னிக் கொண்டு இருந்தது..
அப்போதுதான் , அவள் சந்துருவின் சட்டைப் பாக்கெட்டைக் கிழித்தது அவனது நினைவுக்கு வந்தது..
"டேய்..!!" , கலவர முகத்தோடு சந்துரு , மூர்த்தியிடம் காட்ட , மூர்த்தி , "போய் எடுடா.."
இறுக்கமான முகத்தோடு மூர்த்தியைப் பார்த்த சந்துரு , மெல்ல அதன் அருகில் போய் மண்டியிட்டு , நடுங்கும் கையால் அந்தச் செயினைப் பற்றி இழுத்தான்..
அந்தச் சடலத்தின் கை இருக்கமாக மூடிக் கிடந்ததால் , அந்தச் செயின் விரல்களை விட்டு வரவே இல்லை..இவன் கைகளால் , அந்தச் சவத்தின் கை விரல்கள் ஒவ்வொன்றாகப் பிரித்து , அந்தச் செயினை வெளி எடுத்தான்...
அவன் கைகளிலும் அந்தச் செயினிலும் ரத்தக் கறை பிடித்துக் கொண்டது..காரில் இருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து , தன் கையையும் செயினையும் கழுவிக் கொண்டு , அந்தச் சவத்தைப் பார்த்துக் கொண்டே காரில் ஏறிக் கிளம்பிப் போனார்கள் இருவரும்...கார் தூரத்தில் சென்று ஒரு புள்ளியாய் மறைந்து போனது...
இருட்டுக்குள் தன்னந்தனியாய் , சடலமாய்க் கிடந்தாள் அவள்...
........................................................................................................................................................................................................
"ஆஆஆஆ ........."
பின்னந்தலையில் அடித்துக் கொண்டு அலறினாள் அமுதா...
"செத்துப் போனேன்டி நான்...செத்தே போனேன்..கொலை பன்னாண்டி உன் காதலன் என்னை..சாவகாசமா உக்காந்து என் கழுத்தை நெறிச்சாண்டி.."
"சந்துருவா..!!"
"அந்த பொந்துரு தாண்டி.."
கண்களை விரித்து ஆத்திரத்தில் கத்தினாள் ,"செத்துப் போற வலி தெரியுமாடி உனக்கு..", குரல் உடைந்து கண்களில் கண்ணீர் வர , தொண்டைக் குழியில் கை வைத்துக் கொண்டு , "இங்க வலிக்கும்டி..இங்க வலிக்கும்..வலிச்சுதுடி..வலிச்சுது...விட மாட்டேண்டி உங்களை..விடவே மாட்டேன்..உன் காதலனுக ரெண்டு பேர் இருக்கானுகளே , அவனுகளை நான்தான் , நான்தாண்டி , நான்தான் லாரி முன்னாடி தள்ளி விட்டேன்...பரதேசி நாய்க , தப்பிச்சுட்டானுக..ஆஸ்பத்திரி படியில உருட்டி விட்டேன்...அப்பவும் தப்பிச்சுட்டான் அந்த பொந்துரு..."
"................."
"ஆனா விட மாட்டேண்டி...அவனுகளை என் கையாலேயே சாகடிப்பேன்..என்னை மாதிரியே அனாதைப் பொணமா நடுத்தெருவுல கிடப்பானுங்கடி.." , அங்கும் இங்கும் நடந்து கொண்டு கதறிக்கொண்டிருந்தாள் அமுதா..
"................"
திடிரென்று மீராவின் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டாள் அமுதா...நெட்டுக்குத்தலாக ஒரு காலை மடக்கிக் கொண்டு கையை தலைக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டு , அவள் பாட்டுக்கு அழுது கொண்டிருந்ததைப் பார்க்கப் பார்க்க மீராவுக்கு , வயிற்றுக்குள் யாரோ கையை விட்டுப் பிசைவது போல் இருந்தது...கிட்டத்தட்ட சுயநினைவை இழந்து இருந்தாள்...
கண்களில் வழிந்து கொண்டே இருந்த கண்ணீரை இடது கையால் மாறி மாறி துடைத்துக் கொண்டே இருந்தாள் , அமுதா...
"உனக்குத் தெரியுமாடி , எங்க கிராமத்துல எங்க பக்கத்து வீட்டு வேலண்ணன் , இந்த ஊருல இருக்குற ஒரு ஜவுளிக்கடையில எனக்கு வேலை வாங்கித் தர்றதா சொன்னாரு..வேலண்ணனைத் தேடித் தாண்டி வந்தேன்..கடைசி பஸ்சுக்குத் தான் வந்தேன்.."
திடிரென்று ஆத்திரத்தில் கதற ஆரம்பித்தாள்..
"ஏய் , எனக்கு ஒரு தங்கச்சி இருக்காடி..பூங்கொடி..நான் வருவேன் வருவேன்னு பாத்துட்டே இருப்பாளேடி..அய்யோ...நான் செத்துட்டேன்னு கூட அவளுக்குத் தெரியாதேடி..பூ மாதிரி இருப்பாடி என் தங்கச்சி..அவளை அனாதை ஆக்கிட்டீங்களேடி பாவிங்களா.."
இடது கன்னத்தில் ஓங்கி விழுந்த அறையில் , முகம் கிழிந்து மயங்கிச் சரிந்தாள் மீரா..
அமுதா எழுந்து நின்று , மயங்கிக் கிடந்த மீராவைச் சுற்றிச் சுற்றி ஓடி ஓடி உற்றுப் பார்த்தாள்...தன் இடது காலால் மீராவின் முகத்தைத் தூக்கித் திருப்பிப் பார்த்தவள் , மீரா முழுவதுமாய் பலவீனமாகியிருந்ததை உணர்ந்தாள்..தான் நினைத்தது நிறைவேறப் போகும் சந்தோஷத்தோடு , மீராவுக்குள் முழுவதுமாய்ப் புகுந்து கொண்டாள் அமுதா..
விருட்டென்று எழுந்து நின்று "விட மாட்டேண்டா..வர்றேண்டா ..வர்றேன்.." , கண்ணாடி முன் நின்று கர்ஜித்தாள் , முழுவதுமாய் அமுதாவாகிப் போன மீரா...
இரண்டு நாளானது , மூன்று நாளானது..அமுதா வீட்டை விட்டு வெளியே வரவே இல்லை...
தன்னைப் பலி கொடுத்தவர்களைப் பழி வாங்கும் சந்தர்ப்பத்திற்காக ஏங்கிக் காத்துக் கொண்டிருந்தாள்..
அவள் எதிர்பார்த்துக் காத்திருந்த அந்த நாள் வந்தது..
அன்று...
ஜன்னல் வழியே எதையோ உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்தாள் அமுதா..
மீரா வீட்டுத் தொலைப்பேசி அடித்தது..மெல்ல எடுத்துப் பேசினாள்...
"ஹலோ.."
"மீரா...?"
"ம்..."
"நான் மகேஷ் பேசுறேன்.."
"மகேஷா.." 'இது யாரு புதுசா'
"மீரா , உனக்கும் சந்துருவுக்கும் நல்ல ஃப்ரெண்ட் அப்படிங்கற முறையில உன்கிட்ட ஒரு விஷயம் பேசத்தான் கூப்பிட்டேன்..நீ என்னைத் தப்பா எடுத்துக்காதே.."
"சொல்லு..." 'ஓ பொந்துருவொட பிரெண்டா சொல்லு சொல்லு..'
"அந்த மூர்த்தி பய நம்ம சந்துருவைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கிட்டு இருக்கான்..ஹெராயின் ஏத்திக்கிட்டு இருக்காங்க ரெண்டு பேரும்..நான் எவ்வளவு சொல்லியும் சந்துரு கேக்கலை..நீதான் மீரா ஏதாவது பண்ணனும்..."
"இப்போ எங்க இருக்காங்க ரெண்டு பெரும்.."
"பகவதிபுரம் பக்கத்துல பழைய பாழடைஞ்ச பில்டிங் ஒண்ணு இருக்குது இல்ல..அங்கதான் இருக்காங்க.."
ரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டு இருந்தது , ஜன்னல் வழியே அவளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த பூனை...கையில் இருந்த ரத்தத்தைத் துடைத்துக் கொண்டே , வீட்டை விட்டு வெளியேற முயன்றவள் , சட்டென்று திரும்பி நின்று , மீராவின் கார் சாவியை எடுத்து , கையில் வைத்து உற்றுப் பார்த்துக் கொண்டே , தலை சாய்த்து வெறித்தனமாய் சிரித்தாள்..
"ஹா ஹா ஹா...வந்துட்டேண்டா என் செல்லக் குட்டிகளா.."
காரை ஸ்டார்ட் பண்ணி , அமுதா மிதித்த மிதியில் , காம்பௌண்ட் கேட் தெறித்துப் பறந்து போய் நடுத்தெருவில் விழுந்தது...
80...90.....100......110......
மின்னலாய்ப் பறந்த அமுதா , பகவதிபுரம் பழைய பில்டிங் முன் சர்ரென்று வந்து நின்றாள்...
அவளது கண்கள் சந்துருவையும் மூர்த்தியையும் தேடின...சந்துருவினுடைய கார் அங்கு நின்று கொண்டு இருந்தது..அமுதாவை பலி வாங்கிய அதே கார்...
அருகே சந்துருவும் மூர்த்தியும்...ஹெராயின் மயக்கத்தில்...
கண்களில் அனலோடு , காரை ரிவர்ஸ் எடுத்த அமுதா , சர்ரென்று கொண்டு போய் சந்துருவின் மேல் மோதினாள்..என்ன நடக்கிறது என்பதை உணர்வதற்கு முன்னமே , சந்துரு ரத்த வெள்ளமானான்...
இந்தக் கோரக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த மூர்த்தி , சற்று நிலை உணர்ந்தவனாய் , "ஏய் ஏய் மீரா என்ன பண்றே.." என்று கத்திக் கொண்டே எழுந்து தப்பித்து ஓடினான்...
வேகமெடுத்த அமுதா , மூர்த்தியின் மேல் போய் காரை இடித்து , அவனைத் தரத் தரவென்று தள்ளிக் கொண்டு போய் சுவற்றில் மோதினாள்..காருக்கும் சுவருக்கும் நடுவில் சிக்கிய மூர்த்தி , நசுங்கிப் போய் இரண்டு துண்டாய் விழுந்தான்...
காரில் இருந்து இறங்கிய அமுதா , வெறி நிறைந்த பார்வையோடு அங்கும் இங்கும் வேக வேகமாய் மூச்சிரைக்க நடந்தாள்...
சட்டென்று எதையோ கவனித்தவளாய் , குனிந்து தலை சாய்த்து உற்றுப் பார்த்துக் கொண்டே நடந்தவளது கண்களில் பட்டான் , எஞ்சிய உயிர் ஒட்டிக் கொண்டு , நெஞ்சு மேலும் கீழும் தூக்கித் தூக்கிப் போடத் , துடித்துக் கொண்டிருந்த சந்துரு...
"ஹ ஹா ..ஹ ஹா .. ஹ ஹா ...."
பின்னந்தலையில் அடித்துக் கொண்டு சிரித்த அமுதா , குதிகாலிட்டு அமர்ந்து , சந்துருவின் கழுத்தை நெரிக்கத் தொடங்கினாள்...
துடி துடித்த சந்துரு , அவளது தலைமுடியைப் பற்றி இழுத்தான்.. அவளது ஆடையைக் கிழித்த சந்துருவின் கையோடு சிக்கிக் கொண்டு வந்தது அவள் அணிந்திருந்த அந்தச் செயின்...
துடிதுடிக்கச் சந்துரு உயிர் விடுவதைப் பார்த்து ரசித்த அமுதா , மீராவின் காரில் இருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்துத் தன் கையிலிருந்த ரத்தக் கரையைக் கழுவிக் கொண்டு , தண்ணீர் பாட்டிலை சந்துருவின் முகத்தில் விசிறி அடித்துவிட்டு அந்த இடத்தில் இருந்து ஓடத் தொடங்கினாள்...
பழிவாங்கிவிட்ட உச்சக்கட்ட மகிழ்ச்சியில் , வெறி பிடித்து கைதட்டிச் சிரித்துக் கொண்டே மீராவின் வீடு வரை ஓடியே வந்து சேர்ந்தாள் அமுதா...
கண்ணாடியின் முன் வந்து நின்று ,"கொன்னுட்டேன் , நான் பழி வாங்கிட்டேன் ...ஹ ஹ " , என்று உருமியவளின் முகம் சட்டென்று மாறி, கண்களில் கண்ணீர் வந்தது..உதடுகள் எதையோ முனுமுனுத்தது ,"பூங்கொடி ..பூங்கொடி.."....அழுதுகொண்டே மயக்கமடைந்து கீழே விழுந்தாள் அமுதா....
எவ்வளவு நேரம் போனதோ தெரியவில்லை , மயக்கம் தெளிந்து எழுந்தாள் மீரா..சூழ்நிலை விளங்காமல் விழித்தவள் , தன் ஆடையில் படிந்திருந்த ரத்தக் கரையைப் பார்த்துத் திடுக்கிட்டாள்...உடல் முழுதும் பயங்கரமான வலி பரவிக் கிடந்தது...
ஒன்றும் புரியாமல் , நடக்க முடியாமல் நடந்து ஹாலுக்கு வந்து சோஃபாவில் சரிந்தாள்..தவறுதலாய் டிவி ரிமோட்டின் மேல் அவள் உட்கார்ந்து விட , டிவி ஓடியது...
"முக்கியச் செய்தி : பகவதிபுரம் பழைய கட்டிடத்தில் இரண்டு வாலிபர்கள் படுகொலை.பிரேதப் பரிசோதனையில் , அவர்கள் போதைப் பொருள் உபயோகப் படுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது..கொலையாளி யார் என்பதை விரைவில் தெரிவிப்பதாக காவல் துறையினர் அறிவிப்பு.."
"ஹே அய்யோ சந்துரு , மூர்த்தி..."
பதறிப் போய் , டிவிக்கு அருகில் ஓடிப் போய் நின்று பார்த்தவள் , வாசலில் யாரோ பேசும் குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள்...
"உங்க காதலன் சந்துருவையும் அவருடைய நண்பர் மூர்த்தியையும் கொலை செய்த குற்றத்துக்காக உங்களைக் கைது பண்றோம் மிஸ்.மீரா.."
"என்னது ..நான் கொலை செஞ்சனா.."
ஒரு நொடியில் ,அவளுக்கு ,அன்று அமுதா பேசியது அனைத்தும் கண் முன் வந்து மறைந்தது...எல்லாம் புரிந்து போனது அவளுக்கு...
இறுக்கமான முகத்தோடு , சலனமற்று அமைதியாய் உட்கார்ந்து இருந்தாள் மீரா , சிறைக் கம்பிகளுக்குப் பின்னால்..
அவளுக்கு அருகில் , அவளது நிழல் போல் அமர்ந்திருந்தாள் , அமுதா..
இம்முறை , ஏனோ மீரா பயப்படவில்லை...!!!
- கிருத்திகா தாஸ்...