விதியோடு மல்லுக்கட்டு - சந்தோஷ்

இன்னும்
கட்டிமுடிக்கப்பட்ட
கனவு கோட்டைகளுக்கு
நனவு வர்ணங்களை
பூசிமுடிக்கவில்லையே.....!
அதற்குள் என்ன அவசரம்
எனக்கு வாய்த்த விதியே..?
குடியேறவிருக்கும் கோட்டையின்
வழித்தடங்களிலெல்லாம்
கடுமையான முயற்சிகளில்
அர்த்தமுள்ளதாக பதிந்த
என் இலட்சியச்சுவடுகளின்
பாதங்களை ஏனோ இப்படி
இரக்கமில்லாமல்
குழந்தையின் கையிலுள்ள
பொம்மைகளை அபகரிக்கும்
அரக்கனை போல விளையாடுகிறாயா
என்னை சீண்டும் விதியே..?
உனக்கு தெரியுமா..?
ஒவ்வொருமுறையும்
அசராமல் நீயும் என்னை
கவிழ்த்துவிட, தலைவெட்டிவிட
மல்லுக்கட்டி
யுத்தமிடும் போதெல்லாம்
உன்னை உடைத்தெறிய
என் வலிமைகரங்கள்
இரத்தம் தெளித்து
அழுத அழுகையும்..
அவ்வழகையில் என்னிருதயம்
நின்றுத்துடித்த ரணவேதனையும்
உனக்கு தெரியுமா? விதியே..!
உனக்கு ஒன்று
சொல்ல விரும்புகிறேன்.
சதிக்கார விதியே...!
அறியாமையிலிருக்கும்
மரண தேதி
அருகாமையில் இருக்கிறதென
அறிந்த நொடிமுதலாய்
துடிதுடித்து வெடிவெடித்து
மனமுடைந்தாலும்,
உடைந்த கோடிகோடியான
மனச்சிதறல் துண்டுகளில்
தன்னம்பிக்கையை
மட்டும் பொறுக்கி
மரணத்தை வெல்லும்
நிவாரணம் பெற்றுவிடுகிறேன்.
வாழ்க்கை வாழ்வதற்கு மட்டுமல்ல
சாவதற்கும்தானே.......??
புரிகிறது..! புரிகிறது..!
ஆனாலும் விதியே....!
கட்டுப்பட்டுவிடு என கெடுவிதித்து
போதிமரத்தினை நீ பரிசளித்தால்
புத்தனாகிவிட நான் மூடனல்ல..!
------------------------------
-இரா.சந்தோஷ் குமார்.