உலக தாய் மொழி தினம் -21022015

பன்மொழி பயின்ற பாவலர் ஆயினும்
சிந்திக்கும் மொழியோ தித்திக்கும் தாய்மொழி !
உள்ளத்தில் உறைந்திட்ட உறங்கிடும் உணர்வுகளை
உலகிற்கு உரைத்திட உதவிடும் தாய்மொழி !
எல்லையிலா எண்ணங்களை எழிலோடு வடித்திட
ஏற்றமிகு எழுதுகோல் என்றென்றும் தாய்மொழி !

இமைதிறந்த நாள்முதல் இதயம்நிற்கும் நேரம்வரை
குறையாத செல்வம் உடனிருக்கும் தாய்மொழி !
முகமறியா முகம்கூட உரிமையுடன் உறவாடி
முகவரியை முன்மொழியும் முத்தான தாய்மொழி
உல்லாசப் பயணமாய் உலகையே சுற்றினாலும்
உடன்வருவது உயிரோடுக் கலந்திட்ட தாய்மொழி !

விந்தைமிகு விஞ்ஞானம் விண்ணளவு வளர்ந்தாலும்
வியத்தகு விளைச்சலின் வித்தாக தாய்மொழி !
அலுவல் ஆய்வென்று அயல்நாட்டை அடைந்தாலும்
அடையாளம் காட்டிடும் அவரவர் தாய்மொழி !
சுழலும் பூமிதனில் சுடரொளியாய் திகழ்ந்திட
ஒளியேற்றும் திருவிளக்கு நிகரில்லா தாய்மொழி !

யாசிக்கும் உயிர்களில் நேசிக்கும் நெஞ்சங்கள்
சுவாசிக்கும் காற்றே பேசுகின்ற தாய்மொழி !
மனமாற்றம் செய்திட்டு மதமாற்றம் செய்தாலும்
மாற்ற இயலாதது உயிரான தாய்மொழி !
வாழும் காலம்வரை வணங்கிப் போற்றிடுவோம்
இயங்கிடும் இதயத்தின் இதயமான தாய்மொழி !

பழனி குமார்

( மீள் பதிவு )

எழுதியவர் : பழனி குமார் (21-Feb-15, 7:37 am)
பார்வை : 2687

மேலே