மெல்லப் புதைந்திடும் என்னினமே-பாகம் 1

(ஒரு இளைஞனாய்,கவிஞனாய்...நிகழும் பேரழிவை நிறுத்தத் துடிக்கும் மலேசியத் தமிழனாய் ...இது என் சிந்தனைகள் ...எனவே இதில் புள்ளி விவரங்கள்,சரித்திர சான்றுகள் தேடுவதை விடுத்து தொடருங்கள் ....)

என்ன நடக்கிறது ?...எங்கே போகிறது என்னினம் ?..5000 பேர் இருப்பார்களா ?...குண்டர்கள் என்று குறியிடப் பட்டவர்கள்?...திருந்தாத திருடர்கள் ?..போதை பொருள் பாதையில் 'வாழ்பவர்கள்' ?..
இல்லை ,ஒரு 50000 பேர்?..அப்படி வைத்துக் கொண்டாலும் மீதம் உள்ள 19,50,000 பேர் என்ன செய்கிறார்கள் ?..பொருளாதாரம்,விகிதத்தில் கொஞ்சம் முன்னேற்றம் காட்டினாலும்..சமுதாயம் வீழ்ச்சி பாதையில் வெகுவேகமாய் நகர்கிறதே !....வளர்ந்திருக்கிறோம்,வளருகிறோம் ஆனால் கற்களையும் முட்களையும் களைய மறந்து விட்டோம் ...இன்னும் சொல்லப் போனால் ,நாம் அவற்றை கருதுவது கூட கிடையாது!..அப்படி என்ன சுயநலம் ?..தன்னை மட்டும் எண்ணி அடுத்த சகோதரனை அலட்சியப் படுத்துதல்?...பொது நலம் என்ற வார்த்தையை ஏதோ எவனுக்காவது உதவி,நாளிதழில் அதை விளம்பரப் படுத்துதல் மட்டும் தானா?...சமுதாய அக்கறை என்பது வெறும் கோப்பி கடையில் விவாதங்கள் செய்வதும்,ஆ ஊ என்றால் கூட்டம் சேர்த்து பேரணி நடத்துவதும் தானா ?...அப்பட்டமாய் தெரிகிறது ,அரசியல் நாடகங்கள்..பாவம் !, பதவி தேடும் அவசரத்தில் அவர்கள்... உதவி தேடும் நம்மை எப்படி கவனிப்பார்கள்?!..

அரசாங்கம் என்பது நீயும் நானும் அவனும் தேர்ந்தெடுத்த ஒரு நிர்வாக முறை ,அவ்வளவு தான்! ...நாமே சரியில்லை என்னும் போது ,நாம் தேர்ந்தெடுத்தது பற்றி சொல்லவா வேண்டும்? ...இங்கு மாற வேண்டியது நாம் தானே அன்றி அரசாங்கம் அல்ல! கற்றவர்கள் இல்லாத சமுதாயம்
என்றும் சொல்ல முடியாது ..பிறவியிலேயே அறிவாளியாய் தான் நாம் பிறக்கிறோம்...சமகால சூழ்நிலைகள் சரியில்லை என்றால்...பிறகெப்படி,அறிவிலும் திறனிலும் நம்மிலும் பின்தங்கியோர் வெற்றிநடை போட முடிகிறது?..நமது பழைய தலைமுறை என்பது ராஜராஜ சோழனோ,புத்தனோ ,காந்தியோ அல்ல ...உன் பெற்றோரும் என் பெற்றோரும் தான் !!..தாத்தாக்கள் என்பது கூட தள்ளி வைக்க வேண்டியதே ! ..காரணம் ,இன்று நாம் காணும் சுக வாழ்க்கையோ...சோதனை வாழ்க்கையோ நம் பெற்றோரின் காலத்தில் நிகழ்ந்தவையே அவற்றை தீர்மானிக்கின்றன ...பழம்பெருமை பேசியது போதும்...இனி வரும் எதிர்காலம் நம்மை பற்றி என்ன பேசும் என்று சிந்திக்க தொடங்குவோம்...

வீரம் தம் இரத்தத்தில் ஊறுவதாய் எண்ணி ,...விபரீதப் பாதையில் விழுந்து மடியும் என் உடன்பிறப்புகளின் மரணத்தில் ஒழிவு மறைவின்றி இந்த ஒட்டு மொத்த சமுதாயமும் பின்னணி காரணமாய் திகழ்கிறது !...இவர்கள் துடைத்தொழிக்கப் பட வேண்டியவர்கள் அல்ல! தூசு நீக்கி துடைத்து சுத்தம் செய்யப்பட வேண்டியவர்கள் ...அந்த கடமையில் நாம் தவறி இருக்கிறோம்!! ..அவர்களின் இளமை வேகத்தை...இழவுப் பாதையில் வழிதவற விட்டுவிட்டு ,இவர்கள் பாவிக்க முடியாதவர்கள் என்று பச்சை குத்தியது இந்த சமுதாயம் தான்!...அன்பிற்கு ஏங்கும் பருவத்தில், வறுமையை காரணம் காட்டி, தனிமையில் திரிய விட்டு பிறகு,சேரக் கூடாத இடத்தில் சேர்ந்து திரிகிறார்கள் என்று வெற்று வார்த்தைகளால் அவர்களின் வெற்றிப் பாதையை மூடி வைத்ததும் இதே சமுதாயம் தான் !வன்முறையை நான் நியாப் படுத்த வில்லை !..அதற்கான பின்புலம் தெரியாமல் அதை ஒழிப்பதும் சாத்தியமில்லை ... (தொடரும்...)

எழுதியவர் : அபி (3-Mar-15, 10:21 am)
பார்வை : 107

மேலே