பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்

"குட்மார்னிங் கவி"
"வெரி குட்மார்னிங்.... புவனா...."
"என்ன மேடம் இன்னைக்கி மகளிர் தினம்னு கலக்கலா வந்து இருக்கிற மாதிரி தெரியுது...."
"ம்.... வாழ்த்துக்கள் டி!", தோழிகள் இருவரும் பேசி சிரித்துக்கொண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டு.... சீருடைக்கு மாறினார்கள்...
"புவனா இன்னைக்கி டியூட்டி முடியவும் எங்கூட கொஞ்சம் வரமுடியுமா?"
"ம் எங்கடி போறோம்...ட்ரீட் தர்றியா....."
"ம்...கூம்..... ஒரு எடத்துக்கு போகணும்... எங்கன்னு போகும்போது சொல்றன்..."
"ஒ.கே.பாய்..."
"இன்னைக்கி கந்தசாமி தாத்தாவுக்கு டிஸ்ஜார்ஜ்...எப்ப பண்றதா சொன்னாங்க..."என்று கேட்டுக்கொண்டே வந்தவள்...
டாக்டர் சிவாவை பார்க்கவும், "மார்னிங் சார்..." என்று சொல்லிக்கொண்டு வேகமாக அந்த இடத்தை விட்டு நீங்கினாள்...
அவள் வார்டுக்கு சென்று அவர் அவர்களின் ரிப்போட்டை பார்த்து மருந்து கொடுக்க ஆரம்பித்தாள்...
கவிதாவை பார்த்து ஓடி வந்த குழந்தை, "அக்கா.. அக்கா... என்ன புடிச்சி குடுத்துடாதிங்கக்கா..... என்று ஓடி வந்து ஒளிந்தவளை,
"அச்சச்சோ.... குட்டிப்பாப்பாவ அம்மா ஏன் புடிக்க வர்றாங்க" என்று கேட்க....
"மருந்து குடிக்கணுமா அது ஒரே கசப்பா இருக்குக்கா.... ஓ....", என்றது....
"ம்ம்ம்ம்....குட்டிப்பாப்பாக்கு வீட்ல தாத்தா பாட்டியெல்லாம் இருக்காங்களா...."
"ம்..இருக்காங்களே...."
"அவங்க கூட போய் ஜாலியா விளையாட வேண்டாமா.... ஸ்கூலுக்கு போய் ப்ரண்ஸ்ஸோட விளையாடவேண்டாமா... பாப்பா கையில இருக்குற காயம் எப்படி சீக்கிரம் குணமாகும்? பாப்பா குட்டி மருந்து சாப்ட்டா.... ம் பாப்பாவுக்குதான் எல்லாம் தெரியுதே..."
"ம்.... ஆமால்ல...."
"ம்...அதுக்குதான் அடம்பிடிக்காம மருந்து குடிச்சிட்டா இன்னைக்கே சீக்கிரம் வீட்டுக்கு போயிடலாம்....."
"ம்...சரிக்கா...", என்று குழந்தை கவிதாவின் கன்னத்தில் தன் இதழை பதித்துவிட்டு ஓடியது....
"அதற்குள் கவிதா உன்ன டாக்டர் கூப்ட்றார்", என்று குரல் வரவும் அந்த இடத்தை விட்டு டாக்டரின் அறைக்குள் நுழைகிறாள்...
"கவிதா....!"
"வாழ்த்துக்கள்", என்று ஒரு சின்ன பரிசை சிவா கவிதாவிடம் கொடுக்க....
"இது எதுக்கு சார்....?"
"என்ன கவிதா இன்னைக்கி பெண்கள் தினமாச்சே.... அதுக்குதான்...."
"ஓ...பெண்களை மதிக்கும் பழக்கமெல்லாம் இருக்கா....?"
"என்ன கவிதா இப்படி கேட்டுட்ட....? படிக்கும்போது உன்ன எவ்வளவோ அவமானப் படுத்தி இருப்பேன்... ஆனா நீ ஒரு நாள் கூட கோபப்பட்டது இல்ல... உன்னோட அன்புல என் தாயையே திரும்பி பார்க்குறேன் இந்த மருத்துவ மனையில...."
"ம்... சரி... சரி....இப்ப என்ன சொல்ல வர்றீங்க..."?
"இந்த கிப்ட்....."
"ம்கூம் வேண்டாம்... இந்த மருத்துவ மனையில நான் மட்டும்தான் பெண்ணா என்னோட எத்தனையோ பேர் இருக்காங்க...."
"சாரி கவிதா...."
"சாரியெல்லாம் வாங்கித் தரவேணாம்.... உங்களால முடியும்.. எதாவது ஆசிரமத்துக்கு நல்லது செய்யுங்க.... நான் வருகிறேன்...", என்று சொல்லிவிட்டு வெளியில் வந்தாள்....
"என்ன கவி போலாமா.... எங்கேயோ போலாம்ன்னு சொன்னியே...."
"ம்...ஆமாண்டி.... வா என்று இருவரும் ஆட்டோ பிடித்து ஒரு வீட்டின் முன்பு நின்றார்கள்....
"என்னடி இது உங்க அண்ணணோட வீடாச்சே.... அவரோடதான் நீயும் உங்கக்கா உங்கம்மாவும் பேசமாட்டிங்களே....
அப்புறம் எதுக்கு இங்க....."
"வா சொல்றேன்", என்று காலிங்பெல்லை அடித்து விட்டு வெளியில் நின்றார்கள் இருவரும்....
கவிதாவின் அண்ணி வந்து உள்ளே அழைக்க அண்ணன் அமர்ந்து இருந்தான்.... எதுவும் பேசாமல்
அண்ணணின் மகளை அழைத்து' "குட்டிம்மா நீங்க நாளையிலேருந்து ஸ்கூலுக்கு போலாம்.. இந்தாங்க உங்களுக்கு பீஸ் கட்டியாச்சு....
இதை உங்கம்மாவிடம் கொடுத்து விடுங்கள்", என்று ஒரு கவரை கொடுத்தாள். அதில் சில சலவை நோட்டுக்கள் இருந்தது....
புவனா வேலைக்கு சொல்லிருக்கேன் இன்னும் சில தினங்கள் நல்ல செய்திவரும் என்று அவர்களிடம் சொல்லிவிடு வா போகலாம்....
"அக்கா நீங்க யாரு?", என்று அண்ணணின் மகள் கேட்க ....
அண்ணி சொன்னாள், "அக்கா இல்லம்மா .... அவங்க உன்னோட அத்தை.....", கண்ணீருடன் வெளியில் வந்தாள் கவிதா....
அத்தனையும் பார்த்துக்கொண்டு எதுவும் பேச முடியாமல் நின்றான் கவிதாவின் அண்ணன்......
எப்படி பேச்சு வரும் பெண் பிள்ளைகளை படிக்க அனுப்ப வேண்டாம் என்று சொல்லி இவர்களுக்காக எதையுமே அவன் செய்தது இல்லை..... படிக்க வைத்து ஆளாக்கிய அம்மாவையும் விட்டு விட்டு நல்ல வேலை, தனக்கு ஒரு துணை என்று தேடிக்கொண்டு வீட்டை கவனிக்காமல் வந்தவனாயிற்றே.....
எப்படியோ அவனின் நண்பன் மூலமாக அனைத்தையும் தெரிந்து கொண்டாள் கவிதா அவனுக்கு தற்சமயம் வேலையும் இல்லை என்பதுவரை..... தான் அன்று படிக்க வைக்க வேண்டாம் என்று சொல்லிய என் தங்கையா இது என்று கண்ணீர் சிந்தினான்...