பெண்ணே உன்னால் முடியும்

உனக்குள் என்ன தயக்கம் - உன்
மனதில் என்ன மயக்கம் - இந்த
......மயக்கம் தயக்கம்
......இரண்டையும் நீக்கு
உலகம் உன்னை வியக்கும்

கிளியென்பார்நீ பிறந்தால் - தலை
வலியென்பார்நீ வளர்ந்தால் - இந்த
......மனிதரைத் தூக்கி
......தீயில் வைநீ
அடிமை என்பதை மறந்தால்

அடங்கி வாழ்ந்ததும் போதும் - வீட்டில்
அடைந்து கிடந்ததும் போதும் - நீ
......துணிந்தால் உந்தன்
......எதிரில் நிற்க
உலகில் இல்லை ஏதும்

புதைத்தால் மனிதன் சாவு - விதைகள்
புதைத்தால் அதற்கு வாழ்வு - நீ
......வாழ்வா ? சாவா?
......ஒன்றை எட்டு
அதுதான் உனக்குத் தீர்வு

கண்ணால் வரைஒருகோடு - அதில்
விண்ணைக் வளைத்துப் போடு - உன்
......நெற்றிப் பொட்டில்
......நிலவை ஏந்தி
பெண்ணின் சுதந்திரம் பாடு

வேர்வை(யை)க் காட்டு உழைப்பால் - உன்
பார்வை(யை)க் காட்டு நெருப்பால் - உனை
......ஏளனம் செய்யும்
......மனிதனைக் கண்டால்
எடுத்து அடிஉன் செருப்பால்

விதியை நம்பும் நிலையை - அகற்றி
மதியைச் செய்வாய் சலவை - நீ
......அறிவும் துணிவும்
......இரண்டும் சேர்ந்த
ஆதாம் ஏவாள் கலவை

அடிமைச் சிறையை உடைத்து - தடையைப்
பொடிபடச் செய்வாய் இடித்து - இனி
......செயற்கைக் கோளில்
......பயணம் செய்நீ
புதிய உலகினைப் படைத்து

உண்மை என்பது கணிதம் - உன்
பெண்மை என்பது புனிதம் - அந்த
......பெண்மை கொண்டு
......உலகை வென்று
கடவுளுக் கெழுது கடிதம்

பிறப்பைத் தந்ததும் நீதான் - காதல்
சிறப்பைத் தந்ததும் நீதான் - அன்று
......கருப்பை வழியே
......காற்றை அனுப்பி
மூச்சைத் தந்ததும் நீதான்

பெண்ணே உன்னால் முடியும் - உலகம்
உன்னால் பெருமை அடையும் - நீ
......இமைகளைத் திறந்தால்
......இரவில் கூட
சூரியன் வந்து விடியும் !

*********** ஜின்னா ***********

[மகளிர் தினத்துக்காக மீள் பதிவு.....]

எழுதியவர் : ஜின்னா (8-Mar-15, 10:38 am)
பார்வை : 4841

மேலே