பிரௌன் மணி-சிறுகதை- பொள்ளாச்சி அபி

தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.!

தளத்தில் பல்வேறு கருக்கள்,பலவிதமான உத்திகள் என பலதோழர்களும் எழுதிவருவது மகிழ்ச்சிக்குரியது.இதில் அவ்வப்போது சில கவிதைகள்,ஒரு நல்ல சிறுகதைக்குரிய அம்சத்துடன் வெளிப்பட்டுவிடுகிறது. [- உங்க புத்தி எப்பவும் அப்படித்தானே போகும்..? என்று தோழர்கள் சிலரின் மைண்ட் வாய்ஸ் எனக்கும் கேட்கிறது.அதை நான் தப்பும் சொல்லமாட்டேன்.-]

இப்படிப்பட்ட கவிதைகளை வாசிக்கும்போது,அதனை ஒரு சிறுகதையாக வெளிப்படுத்திவிட வேண்டும் என்ற ஆவலையும் கட்டுப்படுத்த முடிவதில்லை.அந்த வகையில்,வாய்ப்பிருக்கும் போதெல்லாம் சில கவிதைகளுக்கான சிறுகதைகளைத் தொடர்ந்து இங்கு பதியவும் எண்ணியிருக்கிறேன்.

அவ்வாறு தோழர்கள் சிலரின் கவிதைகளைத் தேர்வும் செய்து வைத்திருக்கிறேன்.

இம்முயற்சிக்கு தன் கவிதையின் மூலம் முதலில் கைகொடுத்தவர் தோழர் சுஜய்ரகு.கவிதை கண்ணீர் அஞ்சலி. இது புதியமுயற்சியா.? என்று தெரியாது.ஆனால்,நான் எழுதும் கதைகளுக்கு தொடர்புடைய கவிதைகளை சிறப்பிக்கவும்,அந்தக் கவிதைகளால் எனது சிறுகதைகள் அர்த்தம் பெறுவதற்கும் ஒரு வாய்ப்பாகவே இதனைக் கருதுகிறேன்.இந்த உத்தியைக் குறித்து உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டால் இன்னும் மகிழ்ச்சி.!

அப்புறம் முக்கியமான விஷயம்..,இதில் தொடர்புடைய கவிதைகளின் படைப்பாளிகளுக்கு ஏதேனும் ஆட்சேபங்கள் இருப்பின் தாராளமாகத் தெரிவிக்கலாம்.பதிவையும் நீக்கிவிடலாம்.ஏனெனில்,உங்கள் தோட்டத்தில்,நீங்கள் போட்ட விதையிலிருந்து முளைத்த மரத்திற்கு நீங்களே உரிமையாளர்.நான் வெறும் சாலையோர நிழல் காய்பவன்.! மீண்டும் பேசுவோம்..!!

அன்புடன்
பொள்ளாச்சி அபி.!
-----------------

பிரௌன் மணி-சிறுகதை- பொள்ளாச்சி அபி.
--1.கவிதை சொல்லும் கதைகள்-----

தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து,அமைதியாக ஊருக்குள் சென்று கொண்டிருந்தது அந்த கிளைச் சாலை.

பகலில் சற்றே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் அந்தச்சாலையின் இப்போதைய இரவில்,அவ்வப்போது இருசக்கர வாகனங்கள் தவிர,போக்குவரத்து எதுவும் இல்லை.

இரவு பத்துமணிக்கும் மேலாகிவிட்டதால்,கடைகள் அடைக்கப்பட்டு விட்டன.முச்சந்தியில் இருந்த கடைகளின் படிகளை,இரவு நேரத் தங்குமிடங்களாக வைத்துக் கொண்டிருந்த சில பிச்சைக்காரர்கள் படுத்திருந்த வரிசையில் பிரௌன் மணியும் படுத்திருந்தது.., யாருக்குப் பிறந்தது,யார் பெற்றது..எந்தக் குப்பைத் தொட்டியில் கண்டெடுத்தது..எப்படி வளர்ந்தது..என்று எந்தக் கேள்வியும் கேட்க அவசியமின்றி,ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அநாதைகள் போலவேதான்,பிரௌன் மணியும் இங்கு வளர்ந்து கொண்டிருந்தது.

இதற்கு பிரௌன் மணி என்ற பெயரும்கூட,மூன்று வருடத்திற்கு முன் ரிட்டயர்டு ஆன,இப்போது அழகாய் ஆங்கிலத்தில் பேசி பிச்சையெடுக்கும் ஒரு கிழவன் வைத்த பெயர்தான்.கால்கள் மட்டும் வெள்ளையாக,உடலெங்கும் மரக்கலரில் இருந்த,இப்போதைக்கு மூன்று வயதான பிரௌன் மணிக்கு,பெயர் மிகவும் பொருத்தமாக இருந்ததால்,மற்ற பிச்சைக்காரர்களும் அப்படியே செல்லமாகக் கூப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

பின்னே..சொல்லிக்கொள்ள உறவுகளற்ற அவர்கள்,பிச்சையின் மூலமாக தங்களுக்குக் கிடைத்ததில்,தானம் செய்கின்ற வாய்ப்பை வழங்கியிருக்கிறதல்லவா..?

லேசாகக் கண்ணயர்ந்திருந்த பிரௌன் மணிக்கு,தூரத்தில் ஏதோ கொட்டுச் சத்தம் கேட்டது.விழிகளைத் திறந்து கிழக்கிலும் மேற்கிலும் பார்த்தது.சத்தம் வரும் திசை மேற்கிலிருந்து கேட்டது.அதன் காதுகள் இப்போது நிமிர்ந்து கொண்டன.இது வழக்கமாய் சாவுக்கு அடிக்கப்படும் மோள இசையில்லையே.. மங்களவாத்தியம் போலல்லவா கேட்கிறது. அப்போதுதான் பிரௌன் மணிக்கு திடீரென நினைவு வந்தது.கடந்த இருதினங்களுக்கு முன்பும் இதேபோலவொரு கோஷ்டி,ஆண்களும் பெண்களுமாய் ஏதோவொரு கோவிலுக்கு காவடி தூக்கிக் கொண்டு பாதயாத்திரை போன விஷயம்.இனி இரண்டு மாதங்களுக்கு, இப்படிப்பட்ட கூட்டம் குறையாது.பிரௌன்மணி எழுந்து கொண்டது.

பிச்சைக்காரர்கள் படுத்துக் கொண்டிருந்த இடத்திலிருந்து நூறு அடித் தொலைவுக்கு மென் ஓட்டமாக ஓடி, வருகின்ற காவடிக் கூட்டத்தை எதிர்கொள்வதற்காகக் காத்திருக்கத் துவங்கியது.

இப்போது கொட்டுச் சத்தம் மிக அருகாமையில் வந்துவிட்டது.ஆண்களும் பெண்களுமாய் ஐம்பதுபேர் வரை இருப்பார்கள்.அவர்களுக்குப் பின்னால்,டி.எம்.எஸ்.குரலில் பக்திப்பாடல் ஒலிக்க,வண்ணவிளக்குகளுடன் ஒரு டெம்போவும் வந்து கொண்டிருந்தது.அதிலிருந்த புளியோதரை,தயிர்சாதங்களின் வாசனை பிரௌன் மணியின் கவனத்தைக் கவர்ந்தாலும், ஏற்கனவே வயிறு நிரம்பியிருந்தது.அந்த வாசனை,அதற்கு எந்த ஆசையையும் தரவில்லை. அவசியமில்லாத நேரத்திலும் கூட,தேடிக் கிடைப்பதைச் சேர்த்துவைத்துக் கொள்ள அதுவொன்றும் மனிதனில்லையே.

கூட்டம் இப்போது பத்து அடி தூரத்தில் நெருங்கிவிட்டது.கூட்டத்தின் இடது பக்கம் சில பெண்களும்,குழந்தைகளும் நடந்து கொண்டிருந்தனர்.ஆண்கள் மட்டுமே நடந்து கொண்டிருந்த வலதுபக்கத்தை நோக்கி பிரௌன் மணி மெதுவாக நகர்ந்தது.பிரௌன் மணி நெருங்குவதை சிலர் கவனித்தாலும் அதனை யாரும் பொருட்படுத்தவில்லை.அதுதானே அதற்கும் தேவையாக இருந்தது. இதுதான் சரியான சமயம். திடீரென்று சாலையைக் கடந்த பிரௌன் மணி, அவர்களுக்கு மிக அருகாமையில் சென்று, “வள்..வள்..வள்..”ளென்று,காதுகள் விடைக்க, வெறிகொண்ட பெருங்குரலில் குரைத்தது.

இதனை சற்றும் எதிர்பாராத கூட்டத்தில் சிலர் துணுக்குற்றனர்.மேனி நடுங்கி அடங்குவது துல்லியமாகத் தெரிந்தது.“வள்..வள்..”அருகாமையில் வந்து குரைக்கின்ற நாயின் கடியிலிருந்து தப்பி விடுவதற்காக,வரிசையைக் கலைத்துக் கொண்டு விலகி ஓடினர். ஓடியவர்களை வரிசையின் கடைசிவரை விரட்டிச் சென்ற பிரௌன் மணி,யாரையும் கடிக்கவில்லை. கத்துவதையும் நிறுத்தவில்லை.

அந்தக் கூட்டத்தில் இருந்த சிலர் இப்போது சுதாரித்துக் கொண்டனர்.ஊன்றுகோல் வைத்துக் கொண்டிருந்த சிலர்,கையை ஓங்கியபடி உஷ்ஷ{..உஷ்ஷ{..என்று விரட்டியபடி வர,பிரௌன் மணிக்குப் புரிந்துவிட்டது.பின்வாங்குவதற்கான நேரம் வந்துவிட்டது. விலுக்கென்று முன்போலவே சாலையைக் கடந்து பாதுகாப்பான தூரத்தில் நின்று கொண்டு கூட்டத்தைப் பார்வையிட்டது பிரௌன்மணி.

கூட்டத்திலும் இப்போது சலசலப்பு எதுவுமில்லையானாலும்,எங்கே மீண்டும் வந்துவிடுமோ.. என்ற அச்சம் அனைவரின் கண்களிலும் தொனிக்க,பிரௌன் மணியின் மீதிருந்த பார்வையை அகற்றாமல் மெதுவே அந்த இடத்தைக் கடந்தது கூட்டம்.

அவர்களையே பார்த்துக் கொண்டிருந்த பிரௌன் மணி,இப்போது விநோதமாக குரலை எழுப்பியது.அது மனிதர்கள் சிரிப்பதைப் போலவே இருந்தது.

“டேய்..பிரௌன்மணி..வெள்ளிக்கெழமை,அமாவாசைன்னு கடைக்காரங்க, கடைமுன்னாடி தேங்காயை ஒடைச்சா வாளு,வாளுன்னு கத்துறே..திடீர்னு தேங்கா ஒடையுற சத்தம் கேக்கறதாலே,பயந்துபோய் நீ கத்துறேன்னு மத்தவங்க நெனக்குறதுலே ஒரு நியாயம் இருக்குது. ஆனா..இந்த மாதிரிக் கூட்டமா மனுசங்க வரும்போதும்,ஏந்தான் வெரட்டி,வெரட்டி குரைக்கிறியோ..? இப்பிடி வெரட்டிகிட்டே இருந்தீன்னா..உனக்கும் பைத்தியம் புடிச்சுருச்சுன்னுதான் சொல்லுவாங்க..உனக்கு அறிவில்லே..?” பிச்சைக்காரக் கூட்டத்தில் பைத்தியம் என்று எல்லோராலும் சுட்டப்படுகின்ற வாலிபன் ஒருவன்,பிரௌன்மணியின் முதுகைத் தடவியபடி,பிரியத்துடன் அங்கலாய்த்துக் கொண்டிருந்தான். பிரௌன்மணியிடம் இப்படிப் பிரியம் கொண்ட இன்னும் சில பைத்தியங்களும் அங்கே உண்டு.

பாட்டுச்சத்தமும்,பிரௌன்மணியின் குரைப்பும்,அருகே உறங்கிக் கொண்டிருந்த ஆங்கிலம் பேசும் கிழவனின் தூக்கத்தை கெடுத்திருந்தது.கிழவன் எழுந்து உட்கார்ந்து கொண்டான்.தலைக்கு வைத்துப் படுத்திருந்த மூட்டையை அருகாக இழுத்து,அதிலிருந்து ஒரு சிறிய துணி மூட்டையை வெளியே எடுத்துப் பிரித்தான்.

குப்பென்று சிகரெட்டுகளின் கருகியநெடி பரவியது.அந்தப் பொதியில் இருந்த துண்டு சிகரெட்டுகளில் சற்றே நீளமாயிருந்த ஒரு துண்டை எடுத்து சாவகாசமாகப் பற்ற வைத்துக் கொண்டான்.அவனது முகத்தை மறைத்துக் கொண்டு புகை அடர்த்தியாகப் பரவியது.

பிரௌன் மணி,அந்த வாலிபனிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, கிழவனிடம் வந்து அவனை உரசியபடி நின்றுகொண்டது.அதன் முதுகின்மீது தனது வலதுகையை வைத்துக் கொண்ட கிழவன்,இன்னொரு முறை சிகரெட்டை ஆழமாக உறிஞ்சி புகையை வெளியேற்றினான்.அப்போது அவனது தோற்றம், பழையகாலத்து அரசர்கள்,சிம்மாசனத்தின் மீது அமர்ந்து கொண்டு,அருகே அமர்ந்திருக்கும் ஒரு புலியையோ,சிறுத்தையையோ தடவிக் கொண்டிருப்பதுபோலத் தோன்றியது.

“யு நோ..,இந்த நாயி,எப்போலேருந்து இப்படிக் கொரைச்சு,குலை நடுங்க வைக்குதுன்னு உனக்குத் தெரியுமா..?” கிழவன்,பைத்தியக்கார வாலிபனை நோக்கிக் கேடடான்.

“ஊஹூம்..”அவன் உதடு பிதுக்கினான்.

“ஒரு மாசத்துக்கு முன்னாடி,ரோட்டுலே ஒடைச்சுப் போட்டிருந்த பூசணிக்காய் வழுக்கிவிட்டதிலே புருசன் பொண்டாட்டி ரெண்டுபேரும்,பைக்குலேருந்து வுழுந்து செத்தாங்களே..அப்ப இருந்துதான் இப்படி இவன் நடந்துக்குறான்”. அந்த வாலிபனுக்கு என்ன புரிந்ததோ..கனத்த மௌனத்தின் வழியாக சிந்தனைக்குள் போய்விட்டான்.கிழவன் மீண்டும் சிகரெட்டை இழுப்பதில் கவனமானான்.

அந்தச் சாலையின் வழியே செல்லும் மனிதர்கள் எல்லோரும் அவரவர் வேலையை மட்டும் பார்த்தபடி போய்க் கொண்டேயிருக்க,யாருடைய
நிர்ப்பந்தமும் இல்லாமலேயே பிரௌன்மணிக்கு மட்டும் அதன் வேலை அதிகமாகிக் கொண்டே வந்தது.

இரண்டு மாதங்களாக,தனது காரியத்திலேயே கண்ணாக இருந்த பிரௌன்மணி,ஒரு வெள்ளிக் கிழமையன்று இரவு ஒன்பது மணியளவில்,அந்தச்சாலையைக் கடந்த மனிதக்கூட்டத்தை விரட்டிக் கலாய்த்துவிட்டு, அப்போதுதான் வந்து வழக்கமான தனது இடத்தில் படுத்தது.மதியம் போதுமான அளவு இரையும் கிடைக்கவில்லை.கொஞ்சம் சேர்வாக இருந்தது.ஏதாவது சாப்பிட்டால் தேவலை.. யென்று தோன்றிக் கொண்டே இருந்தது.வரும்வழியில் இருந்த குப்பைத் தொட்டியொன்றைக் கிளறியதில் உருப்படியாய் எதுவும் தேறவில்லை.அதுவேறு ஒருபக்கம் எரிச்சலாகவும் இருந்தது.இனி பத்துமணிக்கு மேல் புரோட்டாக் கடையின் எச்சில் இலைகள்தான் ஒரேவழி..யோசித்தபடியே லேசாய்க் கண்ணயர்ந்திருந்தது.

“டப்..”தேங்காய் உடைகின்ற சப்தம்.மிக அருகாமையில் இருந்த மெடிக்கல் ஷாப்பின் முன்பிருந்த சாலையில் தேங்காய்ச் சில்லுகள் சிதறிக் கிடந்தன.கற்பூரம்கூட இன்னும் அணையவில்லை.பசியும் சோர்வுமாகப் படுத்திருந்த பிரௌன்மணிக்கு எங்கிருந்துதான் அத்தனை ஆத்திரம் வந்ததோ..,வள்..வள்..வள்..ளென்று விடாமல் ஆங்காரத்துடன் குரைத்துக் கொண்டு,மெடிக்கல் ஷாப்பை நோக்கி ஓடியது.கடைக்கு முன்பாகச் சென்று நின்றுகொண்டும் திட்டியது.

ம்..ம்..இந்த நாயிக்கு இதே வேலையாப் போச்சு..சனியன் புடிச்ச துக்கிரி நாய்..” கடைக்காரருக்கு பொங்கிய ஆத்திரத்தில்,தரையை சுற்றுமுற்றும் நோக்கினார்.கைக்கு வாகாய் கல்லொன்று கிடைக்க,அதனைப் பாய்ந்து எடுத்தவர்,பலம் கொண்ட மட்டும் பிரௌன்மணியை நோக்கிவீச,சுளீரென்று அதன் இடதுபக்க மார்பெலும்பை பதம்பார்த்துவிட்டு கீழேவிழுந்து உருண்டது கல்.

சரியான குறியாக விழுந்த அடியின் வேகம் நிச்சயம் ஒரு எலும்பையாவது உடைத்திருக்கும். தாளமுடியாத வலியில் துடித்த,பிரௌன்மணிக்கு கண்கள் இருண்டது.அதன் குரல் இப்போது ஈனசுரமாக மாறிவிட்டது. திசையே தெரியாமல் தள்ளாட வேண்டியதாயிருந்தது.தள்ளாடித் தள்ளாடி சாலையின் மத்தியில்போய் விழுந்தது பிரௌன்மணி.

சில நிமிடங்கள் கழிந்திருக்கும் இன்னும் பிரௌன் மணி சாலையின் மத்தியிலிருந்து எழுந்து கொள்ளவில்லை.தூரத்தில் மணல் லாரியொன்று வந்து கொண்டிருந்தது.நூறடி தூரத்தில் வரும்போது,லாரியின் ஹாரன் சத்தம் உச்சத்தில் ஒலித்தது.அனிச்சை செயலைப்போல நிமிர்ந்து பார்த்த பிரௌன்மணிக்கு,நிலமையின் விபரீதம் புரிந்தது.அங்கிருந்து அகன்று விட முயற்சித்து,எழுந்துநின்ற பிரௌன்மணி இரண்டு தப்படிதான் எடுத்து வைத்தது.வலியால் பலமிழந்து,நான்கு கால்களும் தள்ளாட அப்படியே சரிந்துவிழுந்தது. வழக்கமாய் வாகனங்கள் வரும்போது,அதில் சிக்காமல் நாய்கள் ஓடிவிடும் என்ற அனுபவமிருப்பதால்,லாரி தன் வேகத்தைக் குறைக்கவில்லை.

அனுபவம் இப்போது பொய்த்துப் போனது.லாரி அந்த இடத்தைக் கடந்த விநாடியின்போதே பிரௌன்மணியும் சரியாக லாரியின் பின்சக்கரங்களில் அடிபட்டு,இடுப்புக்கு கீழே கூழாகிப் போனது.சாலையெங்கும் அதன் ரத்தமும்,குடலும் சிதறிக்கிடந்தன.ரத்தச்சுவடுகளைப் பதித்தபடி, லாரி சென்று மறைந்தேவிட்டது.பின் வந்த வாகனங்களும் விலகி விலகிப் போய்க் கொண்டிருந்தன.

மேலும் சில நிமிடங்கள் கழிந்திருந்தபோது,செத்துப்போயிருந்த,மிச்சமிருந்த பிரௌன்மணியின் சடலத்தை மடியில் எடுத்துவைத்துக் கொண்டு,அந்தப் பெண்பைத்தியம் அழுது கதறிக் ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தது. “என் தலைச்சன் புள்ளைய,ஈட்டியாலே குத்திக் கொன்னீங்களே.. நரமாமிசம் தின்னுற பேய்களே..இப்ப ரெண்டாவது புள்ளையையும் கொன்னுபுட்டீங்களே.. புள்ளைகளைத் தின்னும் பூதங்களே..”

அவளை அருவெறுப்புடன் பார்த்துக் கடந்தபடியிருந்தது இன்னொரு கூட்டம்.இப்போது பிரௌன்மணியின் தொல்லையில்லை.அவளுடைய ஒப்பாரியையும் அவர்கள் காதில் போட்டுக் கொள்ளவில்லை. உண்மையிருந்தாலும்,கற்பனையிருந்தாலும் பைத்தியங்கள் பேசுவதை இந்த உலகம் எப்போது கேட்டிருக்கிறது.? விடிவதற்கு இன்னும் நேரமிருக்கிறது.

-------

கண்ணீர்அஞ்சலி -!
-----------------------------
திருஷ்டிக்காக
உடைத்தப் பூசணி
காவுவாங்கியிருந்தது
ஈருயிர்களை

அன்றிலிருந்தே
தேங்காய்ச் சிதறல்களுக்கும்
எதிரியாகியிருந்தது
அந்தத் தெருநாய்

வெறிபிடித்ததைப் போலவே
விரட்டிக் குறைக்குமது
யாரையும் கடித்ததில்லையாம்

பூனை குறுக்கே வந்ததெனத்
திரும்பியவனையும்
எரிநட்சத்திரம்
பார்த்தாலாகாதென
கண்மூடியவனையும்

அருகில்வந்து குரைத்து
அலறவைத்தது
ஒரு ராத்திரியில்

அலகு குத்தி
ரதமிழுப்போரையும்
பாதயாத்திரைப்
பக்தர்களையும்
பயமுருத்துமது

பிச்சைக்காரர்களிடமும்
பைத்தியங்களிடமும்
சிநேகமாயிருப்பது
மிரண்டவர் கண்டுவியந்த புதிர்

சாலைகடக்கும்போதொருநாள்
அடிபட்டுச் செத்துப்போக

கண்ணீர்அஞ்சலி பதாகை
கேட்டுப்போனவளை
கடை ஊழியர்கள்
விரட்டிவிட்டனர்

நரபலியை
நேரில் பார்த்துப்
பைத்தியமானவளாய்க் கூட
இருக்கலாமவள் !

============--- சுஜய் ரகு=======

எழுதியவர் : பொள்ளாச்சி அபி B +ve (16-Mar-15, 3:17 pm)
பார்வை : 1780

மேலே