தனிமையெனும் பொக்கிஷம் - உதயா

சலனமில்லா நீரோடைகள்
பல நினைவுகளின்
ஊற்றெடுப்புகள்

தொடாமல் தொட்டு
அள்ளி அனைத்துகொள்ளும்
தென்றல்கள்
கண்ணீரின் முடிவிடங்கள்

ஐம்பூதங்களின்
மென்மையான புன்னகை
தனிமையில் வசிக்கும் மனிதனின்
மன ஓட்டத்தில் பிறக்க வைக்கும்
மகான்களின் சிந்தனைகளை

விடையில்லா வினாக்களுக்கு
வினாவே விடையை கூறும்
தருணங்கள்

பகைவனும் படுத்திருப்பான்
ஆழ் மனதின் ஓரத்தில்
நண்பனாக

துரோகங்களும்
துடைக்கப்பட்டிருக்கும்
துள்ளியெழும் கண்ணீரில்

காட்சிகளும் கரைந்து
கருவாக புகுந்துகொள்ளும்
கவிதைக்குள்

தூரிகையும் மாறியிருப்பான்
கரத்தின் உதவியோடு
பிரம்மனாக

எங்கோ
தொலைவில் கேக்கும்
குயிலின் ஓசையில்
உணர்ந்துகொள்வாய்

வலிகளை உருக்கி
வளமான வாழ்வை
வாழும் விந்தையை

இதயத்தின் துடிப்புகளில்
சுரங்களும் புகுந்துகொள்ளும்
நுரையீரலின் சுருக்கத்தில்
சுமைகளும் கரைந்துவிடும்

மூச்சு குழலின்
காற்றின் அலைகள்
ஆயிரம் கானங்களை
வாயினுள் திணித்து செல்லும்

உலகமே புதிதாய் தோன்றும்
உள்ளத்திற்கு இது கனவென தோன்றும்
உணர்வுக்கு மட்டும் இது
உண்மையென தோன்றும்

தனிமை
வாழ்வையே விருந்தாய் படைக்கும்
அட்சயப்பாத்திரம்

தேடல்களுக்கு
கதவினை திறந்துவைக்கும்
கடவு மந்திரம்

பலருக்கு கிடைக்காமலே
மறைந்துவாழும்
பொக்கிஷம் ............

எழுதியவர் : udayakumar (16-Mar-15, 6:43 pm)
பார்வை : 707

மேலே