என்னை விட்டு போகாதே பகுதி 19

“அதன் காரணத்தை உன்னிடம் சொல்லிட வேண்டும் என்று தான் எண்ணி இருந்தேன். அதற்குள் ஏதேதோ நடந்து விட்டது. இப்போது அதை பற்றி உன்னிடம் பேசும் நிலையில் நான் இல்லை” அவன் குரலில் இருந்த வேதனையை அவள் அறியாமல் இல்லை.
“உன்னை வேதனை படுத்தும்படி ஏதேனும் சொல்லிவிட்டேனா? என்னை மன்னித்து விடு கண்ணா..” முதல் முறை இந்த மன்னிப்பு எனும் வார்த்தை தங்கள் இருவரின் உறவில் வருகிறது என்பதை உணர்ந்ததும் இருவரும் சற்றே கலக்கமுற்றனர், அந்த உறவின் தற்போதைய நிலை அறியாமல்.
“ஏன் இப்படி மன்னிப்பு எல்லாம் கேட்கிறாய்.. நமக்குள் இது என்ன புதிதாக?” மனதில் இருந்ததை கேட்டே விட்டான் அவன்.
“இல்லை கண்ணா. உன்னை வேதனை படுத்தியதை போன்ற உணர்வு. அது தான். சரி விடு. நாளை நான் வீட்டிற்கு செல்லலாம் என சொல்லிவிட்டார்கள். நான் காலையிலேயே புறப்படலாம் என்றிருக்கிறேன்” சொல்லிவிட்டு நிறுத்தினாள் அவள் அவனிடம் இருந்து பதிலை எதிர்பார்த்தபடி.
“சரி கவி. காலை நான் அங்கு வந்து விடுகிறேன். உன்னை கொண்டு உன் விடுதியில் விட்டுவிட்டு வருகிறேன்” அவள் எதிர்பார்த்த பதிலையே சொன்னான் அவன்.
இருந்தும் அவள் பெயருக்காக “பரவாயில்லை கண்ணா. நானே சென்று விடுகிறேன். உனக்கு எதற்கு வீண் சிரமம். நீ உன் வேலையை கவனி” என்றாள்.
“சிரமமா. என் தேவதையுடன் இருப்பதை விட வேறு என்ன வேலை இருக்கிறது எனக்கு” சொல்லிவிட்டு சிரித்தான் அவன். அவன் அவளை செல்லமாய் தேவதை என்றே அழைப்பது வழக்கம். அவளும் புன்னகைத்தாள். அவளை மேலும் பேச விடாமல் “நாளை நேரில் பேசலாம். ஓய்வு எடு” என்று சொல்லிவிட்டு அழைப்பை அணைத்தான்.
அவளது அழைப்பை அணைத்த அடுத்த நொடி அவனது விரல்கள் தேவிக்கான குறுஞ்செய்தியை எழுதிட முனைந்தது. “நாளை எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கிறது. நாம் நாளை மறு தினம் சந்திக்கலாம்” என்றது அது.
இதை படிக்கயிலாவது அவளை தாண்டிய ஒன்று என் வாழ்வில் இருப்பதை அவள் புரிந்து கொள்ள மாட்டாளா என்றே எண்ணியது அவனது நெஞ்சம். அவள் என்ன நினைந்தால் என்ன? நாளைய பொழுதை கவியுடன் செலவிட போகிறேன் என்ற மகிழ்ச்சி மட்டுமே இப்போது அவன் மனதிற்கு பெரிதாய் தெரிந்தது.
மறு நாள் காலை விடிந்தது. தூக்கத்தில் இருந்து அவனை எழுப்பிய அந்த கைப்பேசியின் ஒலி ஏனோ அவனுக்கு இனிமையான ராகமாய் இருந்தது, அன்றைய அவனது பொழுது கவியுடன் என்ற மகிழ்ச்சியால்.
வேகமாய் கிளம்பினான். திடீரென்று ஒரு கணத்தில் அவனது மனம் அசைய மறுத்து நின்றது. அது அவனது கைபேசி எழுப்பிய ஒலியினால் தான். அழைத்தது தேவி என்பதை பறை சாற்றியது அவளுக்கென்று அவன் வைத்திருந்த பாடல்.
ஏன் இப்போது அழைக்கிறாள் இவள். அவனது இதயம் இந்த கேள்வியை மட்டுமே கேட்டு கொண்டிருந்தது. அழைப்பை எற்றாள் தானே தெரியும் எதற்கு அழைத்திருக்கிறாள் என்று. மனதை ஒருநிலை படுத்திக்கொண்டு அழைப்பை ஏற்றான் அவன்.
“என்ன தேவி? சொல்” விருப்பமின்றி பேசுவது போன்ற உணர்வு தெரிந்தது அவனது பேச்சில்.
“நீ வேலையாய் இருப்பாய் என்று தெரியும். நாளையாவது உன்னை சந்திக்க முடியுமா என்று கேட்கவே அழைத்தேன்” வெகுளித்தனமாய் கேட்டாள் அவள்.
அவனுள் இருந்த எரிச்சல் மறைந்து பேச தொடங்கினான். “கண்டிப்பாக நாளை நாம் சந்திக்கலாம் தேவி” என்றான் அவன்.
“சரி கண்ணா. நீ உன் வேலையை கவனி. நாளை உன்னை காண்பதற்காக காத்திருக்கிறேன்” என்று சொல்லிவிட்டு அழைப்பை அணைத்தாள் அவள்.
இப்பொழுது எதற்காக இவள் அழைக்க வேண்டும். தன் மனதின் அமைதியை கெடுப்பதற்காகவா. அவனது இந்த நிலைக்கு காரணம் அவனே தான். அவன் மீதே கோபம் தோன்றியது அவனுக்கு. தனது கோபத்தை மறைத்து கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான் அவன்.