ஈழம்

ஈழம் எங்கள் குருதி நாளம்
கொப்பளிக்க குற்றுயிராய் நாங்கள்
மரணத்தோடு மல்லுக்கு நின்று
பல்லாயிரம் உறவுகளை காவுகொடுத்து
மீண்டு திரும்பிய மேன்மைத்தளம்
இலங்கைக்கு முகமாய் ஆனகளம்


ஜீவித வெடிப்புகளுக்குள்
ஜீரணிக்க முடியா
காயங்களை,கவலைகளை,
கண்ணீரை காலம்
கவளமாய் பிசைந்து ஊட்டிய ஞானமடம்
இப்போது எங்கள்
கண்ணீருக்கு அருகில்
கந்தக நெடியுடன் காணுமிடம்


அன்று ஈழம்
முழு தீவுக்கும் முகம்
கனிவுகள் பொதிந்த அகம்
வாழ்வோரை இன்முத்தொடு
வாசல் திறந்து வரவேற்று
குசலம் விசாரிக்கும் குவலயம்

இன்று குரங்குகள் பிரித்தெறிந்த
குருவியின் கூடாய்
இடம்மாறி,தடம்மாறி
இருப்பது நிறம்மாறி
வாழ்வது சாபமான
வடபுலமாய்,கிழ நிலமாய்
கவலைகளுக்கு அருகில்
பெரும் கண்ணீர் ஆறாய்
பெருக்கெடுத்து பீறுகிறது
எங்கள் உள்ளங்களை
ஈழத்தின் இன்றைய முகம்
ஈட்டியாய் மாறி கீறுகிறது
துயரமே இன்னும் நீராய்
எங்கள் மண்ணில் ஊறுகிறது


காவிப் பசுக்களின் மேய்ச்சல் காடாய்
ஆண்டாண்டாய் நாங்கள்
ஆண்ட வாசல்
அதன்பின்பு ஆயிற்று எம்வாழ்வு ஈசல்
ஆயினும் ஒருநாள்.....,
காதரும்,கண்ணனும்,காமினியும்
கைகோர்த்து ஒன்றாகி
சாதிவெறி என்ற
சாயம் வெளுத்து சலவை செய்து
நிலம் நகரும் எல்லைகள்
நிறுத்தப்படும் நாளொன்றில்
புங்கையும்,புனையும்
முறிந்த பனையும்
மீள் உயிர்பெற்று மீட்சி பெறும்
அதை காலம் சொல்லும்
மூவினமும் ஒற்றுமையாய் வாழும்
எங்கள் ஈழம் வெல்லும்.



ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.

எழுதியவர் : ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை. (7-Apr-15, 6:26 pm)
Tanglish : ealam
பார்வை : 99

மேலே