பப்புவுக்கு அப்பா - கே-எஸ்-கலை

பாக்களிலிலே ரதியாகிப்
பிறந்தவளே மகளே...
பூக்களெலாம் தோற்கடித்துப்
பூத்தவளே மகளே...!

................... நீ ...................

பூ விரலால் பூமி தொட்டுத்
தவழ்ந்து வரும் போதும் – உன்
பொன் முகத்தால் நீ மலர்ந்து
புன்னகைக்கும் போதும்...

அன்பென்ற ஆறு பூத்து
அள்ளுதடி வெள்ளம் – என்
ஐம்புலனும் ஈறு தாண்டித்
தின்னுதடி வெல்லம் !
==
கீச்சு மொழிப் பேச்செடுத்துக்
கிறங்க வைக்கும் போதும்...
ஈச்சம் பழம் கொட்டுவதாய்
எச்சில் சொட்டும் போதும்...

மின்மினிகள் நெஞ்சுக்குள்ளே
நிரந்தரமாய் தங்கும் – என்
கண்மணியாள் கதைப் படித்தே
காலத்தினைத் தள்ளும் !
==
பஞ்சு விரல் நெஞ்சில் ஏறிக்
கோலமிடும் போதும் – உன்
பிஞ்சுக் கரம் என்னைத் தீண்டித்
தாளமிடும் போதும்....

நாளமெல்லாம் தேன் வழிந்து
நனைக்குதடி என்னை – என்
ஞாலமெல்லாம் ஆர்பரித்துக்
கொஞ்சுதடி உன்னை !
==
பத்து மாதம் சுமந்தவளின்
மடியுறங்கும் போதும் – உனைப்
பைத்தியமாய்ச் சுமப்பவனின்
மார்புறங்கும் போதும்...

சுற்றும் பூமி சற்று நின்று
உற்றுப் பார்க்கும் உன்னை – தான்
பெற்றுக் கொண்ட சொத்து என
தட்டிக் கொள்ளும் நெஞ்சை !
==
அடம் பிடித்துச் சண்டையிட்டு
அன்னம் மறுக்கும் போதும் - பெரு
சினம் வெடித்துச் சீற்றம் கொண்டு
கன்னம் சிவக்கும் போதும்...

வீறு கொண்ட பாரதியின்
வீரம் தெறிக்கு முன்னில் – அடி
ஊறு வந்தால் வேரறுக்கும்
தீரம் உந்தன் கண்ணில் !
==
சொற்களற்ற சொற்களினால்
கவி படிக்கும் போதும் – உன்
பற்களற்ற வாய் மலர்ந்து
தேன் வடிக்கும் போதும்...

கம்பன் உந்தன் கால் பிடித்துக்
கெஞ்சுவதாய் கண்டேன் – பெரும்
கர்வம் கொண்டு மார்புத் தட்டி
மீசை முறுக்கிக் கொண்டேன் !
==
நரை விழுந்து தள்ளாடி
நான் தளரும் போதும்....
தரை விழுந்து தடுமாறி
நான் எழும்பும் போதும்....

திரைக் கொண்ட கடலொப்ப
அலையடிக்கும் நெஞ்சில்- ஒரு
நரை யற்று, அன்னையுடன்
காப்பே னுனை மண்ணில் !

எழுதியவர் : கே.எஸ்.கலை (4-May-15, 8:24 am)
பார்வை : 3887

மேலே