மதுவால் ஆண்டுக்கு ரூ67,450 கோடி அரசு கஜானாவுக்கு செல்கிறது

மது அருந்தும் பழக்கத்தால் தமிழர்களின் பாக்கெட்டில் இருந்து ஆண்டுக்கு ரூ.67 ஆயிரத்து 450 கோடி அரசு கஜானாவுக்கு செல்கிறது. இதனால் தான் தமிழர்கள் கடனாளியாக மாறும் சூழல் ஏற்பட்டு,
தற்கொலையில் அவர்களின் வாழ்க்கை முடிந்து விடுகிறது. மதுபழக்கம் தமிழகத்தில் எந்தஅளவுக்கு பொதுமக்களை பாதித்துள்ளது என்பது குறித்து மகசூல் டிரஸ்ட் என்ற அமைப்பும், சட்ட பஞ்சாயத்து இயக்கமும் இணைந்து தமிழ்நாட்டில் டாஸ்மாக் பேரிடர் ஆய்வு அறிக்கை என்ற கையேட்டினை வெளியிட்டுள்ளன. இதில், தமிழகம் முழுவதும் 5 மாவட்டங்களில் 15 கிராம மற்றும் நகர பகுதிகளில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் ஆண்கள், பெண்கள் உட்பட 1100 பேரிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. இந்த ஆய்வில் சராசரியாக எத்தனை சதவீதம் பேர் குடிக்கின்றனர், மதுவால் பொருளாதார ரீதியாக ஏற்பட்டுள்ள இழப்பு, சுகாதார சீரழிவு, மதுவால் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது ஏற்படும் வன்முறைகள் குறித்தும் கணக்கிடப்பட்டது. அதில், பல அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது.

குடிப்பவர் எத்தனை பேர்

* தமிழ்நாட்டில் 58% ஆண்களுக்கு குடிக்கும் பழக்கம் உள்ளது. மொத்தம் உள்ள 2.3 கோடி வீடுகளில் 1.32 கோடி வீடுகளில் ஆண்கள் குடிப்பவர்களாக உள்ளனர்.

* தினமும் குடிப்பவர்கள் 53%- (70 லட்சம் பேர்)

* வாரத்திற்கு 3-4 நாட்கள் குடிப்பவர்கள் 17% (22 லட்சம் பேர்)

* வாரத்திற்கு ஓரிரண்டு நாட்கள் குடிப்பவர்கள் 6%

* தங்கள் கணவரது குடிப்பழக்கம் கடந்த பத்தாண்டுகளில் அதிகரித்துள்ளதாக 83% பெண்கள் கூறியுள்ளனர்.

* தங்கள் கணவர் கடந்த பத்தாண்டுகளில் தான் அதிகம் குடிக்க ஆரம்பித்தார் என 55% பெண்கள் கூறியுள்ளனர்.

கடைகள் குறைவது தீர்வாகுமா?

* உலகம் முழுவதும் நடந்த ஆய்வுகளில் ஒருவர் குடிக்கு அடிமையாகும் காரணம் மது எளிதில் கிடைப்பதே என்று கூறப்படுகிறது.

* 2000ம் ஆண்டில் வெறும் 4000 மதுகடைகள் மட்டுமே இருந்ததில் தற்போது 7000 கடைகளாக அதிகரித்துள்ளது.

* டாஸ்மாக் கடைகள் ஒருகிலோ மீட்டருக்கு மேலே உள்ள இடங்களில் மதுகுடிப்போர் எண்ணிக்கை 50 சதவீதம். ஆனால், ஒரு கிலோமீட்டருக்கும் குறைவாக இருக்கும் இடங்களில் 70% மக்களுக்கு மதுகுடிக்கும் பழக்கம் உள்ளது.

மதுவும் பெண்கள் மீதான வன்முறையும்

* குடித்திருக்கும் கணவர், குடிப்பழக்கம் இல்லாத கணவர்கள் தங்கள் மனைவி, குழந்தைகளிடம் நடந்துகொள்வது குறித்த ஆய்வு பல அதிர்ச்சி தகவலை கொடுத்துள்ளது.

* தினமும் குடிப்பவர்கள் 38% பேர் தங்கள் குழந்தைகளை அடிக்கின்றனர்.

* குடிப்பழக்கம் உள்ளவர்கள் 19% பேரும், குடிக்காதவர்கள் 9% பேரும் குழந்தைகளை அடிக்கின்றனர்.

* தினமும் குடிப்பவர்களில் 64% பேர் மனைவியை அடிக்கின்றனர். குடிப்பழக்கம் உள்ளவர்கள் 43%, குடிப்பழக்கம் இல்லாதவர்கள் 8%பேரும்,மனைவியைதுன்புறுத்துகின்றனர்.

* தினமும்குடிப்பவர்களில்84% பேர் மனைவியிடம் வீட்டில் சச்சரவில் ஈடுபடுகின்றனர். குடிப்பவர்கள் 61%, குடிக்காதவர்கள் 25% பேர் சச்சரவில் ஈடுபடுகின்றனர். மதுவிற்காக அதிகம் செலவழிக்கிறவர்கள் பெண்கள் மற்றும் மற்றவர்கள் மீது அதிக அளவில் வன்முறையில் ஈடுபடுகின்றனர்.

மதுவினால் ஏற்படும் பொருளாதார சீரழிவு

* சராசரியாக ஒரு குடிமகன் மாதம் மதுவுக்காக ரூ.4,312 செலவழிக்கிறார். தினமும் குடிப்பவர் ரூ.6,552 செலவழிக்கிறார். இதை தமிழ்நாட்டில் குடிப்பழக்கம் உள்ள 1.32 லட்சம் பேருக்கு ஒப்பிட்டு பார்த்தால் ரூ.44ஆயிரத்து 769 கோடி ஒருமாதத்திற்கு செலவழிக்கிறார்கள்.

* தினமும் அருந்தும் மதுவினால் வேலைக்கு செல்லாத ஆண்களின் சதவிகிதம் 34. இந்த வீடுகளில் மாதத்தில் 14 நாட்கள் வேலைக்கு செல்வதில்லை. சராசரி ரூ.400 தினசரி வருமானம் என்று வைத்தால் ஒரு வருடத்திற்கு இழக்கும் பணம் ரூ.20 ஆயிரத்து 570 கோடி.

உடல்நலக்குறைவால் இழப்பது ரூ.2100 கோடி

மதுவால் 4.4% ஆண்களுக்கு உடல்நலக்கேடு ஏற்படுகிறது. 2.8% ஆண்கள் விபத்தில் சிக்குகின்றனர். சராசரியாக ரூ.34,772 செலவழிப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது. அப்படி பார்த்தால் ஆண்டுக்கு ரூ.2100 கோடி செலவாகிறது. ஒட்டுமொத்த இழப்பு 67 ஆயிரத்து 450 கோடி ரூபாய். ஓராண்டு மதுவிற்காக செலவழிப்பது ரூ.44 ஆயிரத்து 769 கோடி, வேலைக்கு போக முடியாததால் ஏற்படும் வருமான இழப்பு ரூ.20 ஆயிரத்து 574 கோடி. மருத்துவ செலவு ரூ.2100 கோடி. மொத்தம் 67 ஆயிரத்து 450 கோடி. அரசுக்கு வருவாய் ரூ.25 ஆயிரம் கோடி. ரூ.25 ஆயிரம் கோடி வருமானத்திற்காக ரூ.67 ஆயிரத்து 450 கோடியை

இழப்பதா?

* கடந்த 10 ஆண்டுகளில் விபத்தில் சிக்கியவர்களில் 80% மது அருந்தியவர்களே.

* மதுக்கடையை மூடவேண்டும் என 95% பெண்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

* மதுக்கடையை மூட 89% ஆண்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

* அரசாங்கத்தின் முதல் நடவடிக்கையாக என்ன இருக்கவேண்டும் என்பதில் டாஸ்மாக் கடைகளை மூடுவது என்பதை 42% பொதுமக்கள் விருப்பமாக தெரிவித்துள்ளனர். 38% பேர் கல்வித்தரத்தை உயர்த்த வேண்டும் என்றும், 12% சுகாதாரத்தில் கவனம் செலுத்தவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதில் பெண்களில் 61% பேர் டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என்பதிலும், ஆண்களில் 24% பேர் மட்டுமே மூட வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஏழ்மையின் நண்பன் டாஸ்மாக்

* 67% பெண்கள் தங்கள் கணவரின் குடிப்பழக்கத்தால் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தினமும் குடிக்கும் ஆண்களால் 89% குடும்பங்கள் ஏழ்மைக்கு ஆளாகின்றது.

* 13.17 சதவீதம் பெண்கள் விதவைகளாக மாறியுள்ளனர். மொத்தத்தில் மதுவால் சமூகத்தில் மிகப்பெரிய இழப்பும் வறுமையும், குடும்ப வாழ்வில் சீரழிவும் வந்துள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.

எழுதியவர் : செல்வமணி (வலையிலிருந்து ப (26-Aug-15, 9:46 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 78

மேலே