பாதி
பாதி எழுதிய கவிதை கொண்ட
குறிப்பேட்டினை நான்
பாதி உடைத்த வத்திக் குச்சியால்
குறிப்படையாளம் பதித்தேன்!…
பாதி கட்டிலில் அவளோடு படுத்து
பாதிப் பாதி முத்தம் இடுகையில்
பாதியில் அவளும் உறங்கிப் போனாள்…!!.
இடையினில் நானோ
இராணித் தேணீயாய்
கலைக்கப்பட்ட கூட்டினில்
விழித்துச் சிறகடிக்க…!!!.
ஒரு துளி தேனுக்கு
என் அரசில் பாதி!…
ஒரு அன்புச் சொல்லுக்கு
வாழ் நாளினில் பாதி!…
அடுத்த நிமிடத்தின் பாதியில்
அவள் முகம் பாதி திரும்ப…..
அது ஒரு இரவின் பாதி.
சரியாக மணி அப்போது
இரண்டில் ஒரு பாதி.
காலையில் அவளை
இந்தப் பாதிக் கவிதை
பாதிக்குமா?