அந்த நாட்கள்
கடந்துநிற்கும் கனவுகளின் எச்சங்கள்
கடைந்து குடிக்கின்றன உயிரை
விட்டுச்சென்ற ஞாபக புதையலை
கட்டிக்காக்கின்றன கனவுகள்
பருவத்து சிறகுகளில் அன்று
குறுகுறுத்த ஆட்டங்கள் இன்று
நித்திரை சந்தைகளின் வீதிகளில்
கூறுகட்டி விற்கப்படுகின்றன
வழிமறந்து ஓடிய வாழ்க்கை இன்று
விழிவழியே கசிகின்றன
கதைகேட்ட காலமெண்ணியே என்
சதை சற்று சிலிர்க்கிறது
ஆத்தோர மணல்விரிப்பில் கொஞ்சி
காத்தாட விளையாடியது இன்னமும் நினைவிருக்கு
கடிதம்வழியென் காதலைவழியனுப்பி
காத்திருந்த காலம் உண்டு
எத்தனையோ எண்ணமெண்ணி
இத்துனை நாளை கழித்துவிட்டேன்
இனி வரப்போகும் நாளெழுத
இன்னொரு பக்கம் விட்டுவிட்டேன்