தேடி கண்டுகொள்ள கடவுள் என்ன அவ்வளவு சாமானியமா

ஒரு நாத்திகன் ஒரு துறவியிடம் சென்று, "நீங்கள் கடவுள் இருக்கின்றார் என்று உறுதியாக கூறுகின்றீர்கள் அல்லவா!!.

இருக்கும் அந்த இறைவனின் ஆற்றலையும், அவன் எப்படிப் பட்டவன், அவன் எப்படி உள்ளான் என்பதையும் எனக்கு விவரித்துக் கூறினால் நான் நம்புகின்றேன்." என்று கூறினான்.

உடனே அந்த ஞானி, அவனை கடற்கரைக்கு கூட்டிச் சென்றார். ஒரு சிறிய ஓட்டையான கொட்டாங்குச்சியை அவன் கையில் கொடுத்தார்.

"தம்பி நீ இப்போ என்ன செய்யனும்னா, இந்த கொட்டங்குச்சியால் இந்த கடல்நீரை அளந்து கொட்டி, இந்த கடலில் மொத்தம் எத்தனை கொட்டங்குச்சி கடல்நீர் உள்ளது என்று எனக்கு அளந்து சொல்" என்றாராம்.

ஹ ஹ !!!! அது எப்படி சாத்தியமாகும்?!!
கடல் ஆனந்தமானது அதை எதைக்கொண்டும் அளக்க முடியாது. பின் எப்படி அதுவும் ஒரு ஓட்டை கொட்டங்குச்சியால்??!!!

அது எப்படி சாத்தியமற்றதோ அவ்வாறே நாம் நம் ஓட்டை சிற்றறிவைக்கொண்டு இறைத்தன்மையை தேடுவதும்!!!
பல புத்திசாலிகள் கடவுள் எங்கே? அவரை பார்க்காமல் அவரை நாங்கள் நம்ப மாட்டோம் என்று கூறுகின்றனர். தேடி கண்டுகொள்ளும் அளவிற்கு கடவுள் என்ன அவ்வளவு சாமானியமா??.

எத்தனை யோசனை விரிந்துள்ளது என்றே தெரியாத, எத்தனை ஆயிரம் லட்சம் கோடி கிரகங்கள் இருக்கின்றன என்றே கற்பனை செய்ய முடியாத பிரபஞ்ச சக்தியை கண்டுபிடித்து காண முடியும்!!!.

திருவாசகத்தில் அருமையான ஒரு உவமை, " ஒரு வீட்டில் கூரையில் உள்ள ஓட்டை துவாரத்தில் இருந்து சிறிய சூரிய கீற்று வருகின்றது. அந்த வெளிச்சத்தில் இடைவெளியே இல்லாமல் பல தூசித் துகள்கள் தெரியும். அண்டவெளியில், ஒவ்வொரு தூசியும் ஒரு லட்சம் கோள்கள்!!" என்று கற்பனைக்கு எட்டாத உவமையை தரிகின்றார் மாணிக்கவாசகர்.

ஒரு தூசியே ஒருலட்சம் கிரகங்கள் என்றால், அதில் இடைவெளி இல்லாத அத்தனை துகள்கள், அதில் எத்தனை அனந்த லட்சம் கிரகங்கள்??? அப்பா!!!!........... தலை சுற்றுகிறது!!!

அனந்த பிரபஞ்சத்தை நம்மால் கற்பனை செய்ய முடியுமா?
அந்த பிரபஞ்ச சக்தியை நம்மால் அளக்க முடியுமா?
நிச்சயம் முடியவே முடியாது!!!

ஒரு பொருளை நினைக்க அதன் உருவத்தை மனதில் நிறுத்த வேண்டும். ஆனால் பிரபஞ்ச சக்தியான பிரம்மத்திர்க்கோ உருவமும், பெயரும், குணமும் எதுவும் கிடையாது. கற்பனைகள் அற்று மனம் சும்மா இருப்பதே பிரம்மத்தை காண்பதாகும்.

கற்பனைகளை ஜெயிப்பதே பிரம்ம சாக்ஷாத்காரம், கைவல்யம், முக்தி, மோக்ஷம், பிறப்பற்ற நிலை,......................... என்றெல்லாம் கூறப் படுகின்றது.

-Balasubramania Adityan

எழுதியவர் : செல்வமணி - மீள் பதிவு (9-Nov-15, 9:09 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 394

மேலே