விழாக் கோலம் போலொரு மழைக்காலம் ~ ஆதர்ஷ்ஜி
விழாக் கோலம் போலொரு மழைக்காலம் ~ ஆதர்ஷ்ஜி
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மண்வாசனையில் கலந்திட்ட
நெல் வாசனையை முகர்ந்தும்,
மழை நீர் ஓடிடும் வண்டலில்
மண் புழுக்களும் நத்தையும்
பந்தயம் வைத்து ஊரும் விந்தைக் கண்டும்,
மழையோடு வீசும் பெருங்காற்றில் வீழ்ந்த
மாங்காய்கள் பொறுக்கித் தின்ன நனைந்து ஓடியும்
புது வெள்ளம் வரும் வாய்க்காலில் நீர் எடுக்க
குடம் சுமர்ந்து வரும் குமரியரை ஈர்க்க
விரால் மீனாய் வெள்ளத்தில் பாய்ந்து நீந்தியும்
ஒளிந்து விளையாடும் போது
நுழைந்த வீட்டிலெல்லாம் சூடான பலகாரம் தின்றும்
மழையினை விழாவாய் வரவேற்று வாழும்
பழமைசூழ் ஊரில் பிறந்து வாழ்ந்தவன்
நானென்றால் நம்பவா போகிறது ?
மழையைச் சபித்து வாழும் மாநகர மனிதர் கூட்டம் ....
~ஆதர்ஷ்ஜி