காட்சிப் பிழைகள் - 14

இதழ்விரித்த மென்மலரே உதிர்கையிலும் புன்னகைத்தாய் !
இமைமூட முடியாமல் கனவினிலும் ஏன்வதைத்தாய் ?

உன் மின்னல் பார்வை பண்ணிய மாயம்
என் நெஞ்சை வெட்டிச் செய்தது காயம் !

புரிதலில்லாப் பெண்மையிடம் அடகுவைத்தேன் நெஞ்சை
மீட்டெடுக்க முடியாமல் துணைக்கழைத்தேன் நஞ்சை !

என்னகத்தில் ஏற்றிவைத்தாய் காதலெனும் ஜோதி
நமைப் பிரிக்க கொலைவெறியாய் வந்ததிந்த ஜாதி !

நான்பாடும் பூபாளம் முகாரியாய் ஒலிக்குதே
என்காதல் தில்ருபா மீட்டுவாரின்றித் துடிக்குதே !

உன்பிள்ளைக்கு ஏன் என்பெயரை வைத்தாய்
பேர்சொல்லிக் கூப்பிட்டு என்மனதைத் தைத்தாய் ?

சிதையினிலே கிடக்கையிலே என்னிதயம் உனைத்தேடும்
வராவிட்டால் அமைதியாய் எரிந்துவிட விழிமூடும் !

எனக்குள்ளே நம்காதல் புதையுண்டுப் போகுமோ
நம்மையும் மீறியது புனர்ஜென்மம் எடுக்குமோ ?

புரியாது போனாலும் வைக்க மாட்டேன் முற்றுப்புள்ளி
பிரிந்தாலும் வைக்க மாட்டேன் காதலுக்குக் கொள்ளி !

கொழுந்துவிட்டு எரிந்ததே என்காதல் தீபம் !
காற்றுவந்து அணைத்ததே என்செய்தேன் பாபம் ?

மனவயலை உழுது விதைத்தேன் காதல்பயிர்
அறுவடை காணுமுன்னே வெள்ளத்தில் போனதுஉயிர் !
***************************************************************************************
படகோட்டி
***************
அலைகடலே வீடான கதையைநான் சொல்லவோ
வலைவீசி மீன்பிடிக்கும் பிழைப்பைநான் சொல்லவோ ?

கட்டிலில்லை மெத்தையில்லை முப்பொழுதும் படகிலே
உப்புக்காற்றில் உறவாடும் வாழ்வைநான் சொல்லவோ ?

கடலம்மா மடிதனிலே தவழ்ந்தாடும் பிள்ளைகளின்
உடலுக்கு வண்ணமில்லை உண்மைநான் சொல்லவோ ?

சாண்வயிறு வளர்ப்பதற்குச் சாமத்திலே கடலிறங்கி
ஊண்உறக்கம் தொலைத்துவிட்ட நிலையைநான் சொல்லவோ ?

தண்ணீரில் சென்றகணவன் வரும்வரையில் அமைதியின்றி
கண்ணீரில் காத்திருக்கும் தவிப்பைநான் சொல்லவோ ?

மீன்பிடிக்கப் போனவர்கள் மீண்டுவர முடியாமல்
சிறைபிடித்த சோகத்தின் சுவடைநான் சொல்லவோ ?

எல்லைகளைத் தாண்டியதாய் பொய்க்குற்றம் சுமத்திவிட்டு
துப்பாக்கி யால்சுட்ட அவலம்நான் சொல்லவோ ?

பிரச்சனைகள் புரிந்திருந்தும் தீர்வுகாண முடியாமல்
திண்டாடித் திசைதிருப்பும் அரசைநான் சொல்லவோ ?

தத்தளிக்கும் வாழ்க்கையிலே இயற்கையுமே இம்சித்தால்
செத்துவிடத் தோன்றிடுமெம் விதியைநான் சொல்லவோ ???
***************************************************************************************

துளித் துளியாய் ....!!!
````````````````````````````````

மிச்சம் ஏதும் வைக்காமல்
சுருட்டிச் சென்றது வெள்ளம் .
ஆனாலும் மிதக்கிறேன் ...
பத்திரமாய்
இதயத்தில் நீ !

உன் செம்மர இதயத்தைக்
களவாண்டதால்
கட்டையாகிப் போனேன் !

புத்தாண்டு சிறப்புத்
தள்ளுபடியில்
கழிந்து விட்டது
என் காதலும் !

உன் காதல் சின்னத்தில்
வாக்களித்துவிட்டேன்
நீ தந்தது தேர்தல் கால
வாக்குறுதி
என்பதை அறியாமல் ....!

மௌனம் காத்திடு
புதைந்தபின்
நம் ஆன்மாக்கள்
பேசிக்கொள்ளட்டும் ...!

என் கல்லறையில்
சன்னல் வையுங்கள்
கஸல் கேட்டு
கால் கொலுசோடு
காதலி வரக்கூடும் ...!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (25-Dec-15, 12:27 am)
பார்வை : 577

மேலே