புலம்பெயரும் புலர்தல் பூ

* * * * * * * * * * * * * * * *
இருளின் துயில்
கலைந்த பின்னும்
நீ
இழுத்துச் போர்த்தி
உறங்கிக் கொண்டிருக்கிறாய்

சாம்பல் மேட்டின்
தெருக்களைக் கிழித்து
தன் சோதியைப் பிளந்து
முகில்களைத் தொட்டு
முத்தமிட்ட படியே
அவன் சிரித்தபடி வருகிறான்
நீ கணக்கெடுக்காமல்
கண்ணுறங்கலாமா ?

சிமிட்டிச் சிமிட்டி வரவேற்று
சிங்காரித்த பூங்காவனங்கள்
புன்னகைப் பன்னீர் தெளித்து
புதுப்பெண்களாய் மலர்ந்து
பூப்பெய்தி விடியல்களை
மலர்த்திக் கொண்டிருக்கிறது .....

பனித்துளிகள் கூட
பதுங்கியிருந்து
வேடிக்கை பார்க்க
உனக்கென்ன நடந்தது ?
ஏன்
உயிர் இறந்த பூங்கனியாக
உறங்கிக் கிடக்கிறாய் ?

இருளே
துயில் கலைந்து
துயர் களைந்து விட்டது
இளம் குருத்து வாடலாமா ?
தளிர் மொட்டே எழுந்து வா
இனியவளே புலம்பெயரு
ஒரு புலர்தலுக்கு. ..!
-பிரியத்தமிழ் -

எழுதியவர் : பிரியத்தமிழ் : உதயா (26-Dec-15, 11:23 pm)
பார்வை : 99

மேலே