கிழிந்து
கிழிந்து
கிழிந்தது தெரியாமல்
கிழிந்து நீ...
ஆசையின் பொருட்டு
அல்லாடுகிறாய்...
தேவையின் பொருட்டல்ல...
உன்கற்பிதங்களில்
முடங்கிப் போனவன் நீ.
தென்னை ஓலை
இடைவெளியை
வாழையிலையில்
பொருத்திப் பார்க்கிறாய்.
புல்லாங்குழல்
பொத்தல்களை
உன்வேட்டிப் பொத்தல்களோடு
ஒப்பிட்டுக் கொள்கிறாய்.
கடல்நீர் கரிக்கும்
நதிநீர் இனிக்கும்.
இரண்டும் நீர்தானே
நீ தானாய் சொல்லிக்
கொள்கிறாய்.
உனக்கு நீயே
மாலை சூடிக்கொண்டு
உனக்கு நீயே
மகுடம் சூடிக்கொண்டு
கிழிந்தது தெரியாமல்
கிழிந்து நீ...