பத்தி வித்த தர்மம் - வட்டாரத் தமிழ் கிண்டல் குட்டிக் கதை

...........................................................................................................................................................................................

கிடுகு கதவைத் தள்ளிக்கிட்டு வெளியே வந்தா ராக்காயி. “தண்ணி வண்டிய வரக் காணோமே? ”

அவ பாத்த நேரமே தண்ணீ லாரி வந்து தெரு முக்கு சின்டெக்ஸ் டாங்க்கை ரொப்பத் தொடங்குச்சு...

“அம்மாடி ஆத்தாடி... இன்னும் கொஞ்ச நேரத்துல சனம் கூடிடுமே? ”

அவசர அவசரமாக தண்ணீ வேலைங்களை முடிச்சு பாத்திரங்களை காலி பண்ண ஆரம்பிச்சா ராக்காயி..

சின்டெக்ஸ் ரொம்பவும், தண்ணீ லாரி திரும்பிடுச்சு....

ராக்காயி சில பிளாஸ்டிக் குடங்களைத் தூக்கினா. அதுல அந்த மஞ்சக் குடம் ஓட்டை விழுந்து ஓரடி நீளத்துக்கு தண்ணீயப் பீய்ச்சியடிக்கும்.. சின்ன ஓட்டைக்காக அம்மாம் பெரிய குடத்தை குப்பையில தூக்கிப் போடுற அளவுக்கு ராக்காயி ஒண்ணும் கோடீஸ்வரி இல்ல..? ? ! !

ராக்காயி சோப்படைச்சு பாத்தா.. புளியடைச்சுப் பாத்தா.. ஓட்டை எதுக்கும் மசியல. குடத்து தண்ணிய அண்டாவுல ஊத்திட்டு குடத்தை கவுத்தா, அவ மகனுக்கு அதுதான் சேர்..!

நெஜத்துக்கு அந்த பிளாஸ்டிக் குடம் ரொம்ப உதவியாத்தான் இருக்கு...!. கை சேறானால் அப்படியே கழுவிக்கலாம்.. மூனாப்பு குடிசை மலர்விழியக்கா பொறம் பேசும்போது பிடிக்கிற மட்டும் கேட்டுட்டு பேச்சை முடிக்கணும்னா பிளாஸ்டிக் கொடத்து ஓட்டைய அவ பக்கம் திருப்புனா போதும்.. சல்லுன்னு நோஞ்சான் கைப்புள்ள அடிக்கிற மாதிரி தண்ணி அவ இடுப்புல பட்டுடும்.. அப்புறமென்ன? “ சரி, சரி, எனக்கு இன்னாத்துக்கு மத்தவங்க வெவகாரம்..! தலைக்கு மேல சோலி கெடக்குது, வாரன்..! ” ன்னு அக்கா ஓடிப் போயிடும்..!

ஆனா, தண்ணி நிக்க மாட்டேங்கு..

“இன்னாமே, ஒரு புது கொடம் வாங்கியாந்து தரக் கூடாதா? ” ன்னு அன்னிக்கு “புருசன் பயல் ” நல்ல மூடில் இருக்கச்சொல்ல, ராக்காயி கேட்டா. “ஓட்டை விழுந்துடுச்சின்றேன்.. ”

“நீ பத்தி வித்த தர்மப்படி நடக்கிறவொ-ன்னா ஓட்டை தன்னால அடையும்மே.. ”

புருசன்காரன் சொல்லிட்டு தூங்கப் போயிட்டான்....

அத்த தான் ராக்காயியை குழப்பிச்சு....

“அய்யே, பத்தி வித்த தர்மத்துக்கும் இத்த பிளாஸ்டிக் கொடத்து ஓட்டைக்கும் இன்னா கனெக்சனு? ”

அப்பால அந்த சேரிக்கு ஒரு சாமியார் வந்தாரு.. சக்தி வாய்ந்த சாமியார்..! நெறைய யானம்..!

ராக்காயி கேட்டாப்பல.. “சாமி.. பத்தி வித்த தர்மம்னா இன்னா? ”

சாமி இன்னொரு வாட்டி கேட்டு வெளங்கிகிட்டார்.. “ ஓ ... பதி விரதா தர்மமா? அது ஒண்ணுமில்லே.. ஒன் புருசனை மட்டுமே மனசில வச்சு கொண்டாடுற அளவுக்கு “அவன்” நடந்துக்குறதுதான் பதி விரதா தர்மம்..! ”

சாமியார் சொல்ல, ராக்காயி ஆச்சரியப்பட்டா..!

“நா இன்னாவோ நெனச்சேனே..! இவ்ளோ சிம்ப்பிளா? ”

அன்னைக்கு கொடத்த தூக்கச் சொல்ல, “நா பத்தி வித்த தர்மப்படி நடக்கறாங்காட்டியும் இந்த ஓட்டை அடைஞ்சு போகட்டும் ” னா..

அவ சொல்றதுக்கு முன்னாடியே ஏதோ தண்ணியில கெடந்த தூசு மாட்டினதால ஓட்டை அடைஞ்சி போயிருந்தது...! ! !

..........................................................................................................................................................................................

எழுதியவர் : அருணை ஜெயசீலி (24-Mar-16, 9:28 pm)
பார்வை : 305

மேலே