தெருக்கூத்து
வயித்துப் பொழப்புக்கு கயித்துமேல ஆடுறேன்
குடலு சுருக்கம்போக்க உடலத்தான் சுருக்கறேன்
நடுரோட்டில் கம்பிக்குள்ள நான்தாண்டிக் காட்டறேன்
குரங்காட்டம் ஆடிவிட்டு கையில்தட்ட ஏந்தறேன்...
கிழிஞ்ச உடுப்பெனக்கு உறவாத்தான் ஆயிடுச்சு
தெருவோர இடம்தானே என்வீடா மாறிடுச்சு
அஞ்சறிவு ஜீவனெல்லாம் உடம்பொறப்பா ஆனபின்னே
ஆறறிவு மனுசனுக்கு வேடிக்கையா ஆயிட்டேனே..
என்தட்டில் சில்லறையை போடுபவர் சிலர்
கைத்தட்டி மட்டுமென்ன பார்த்துச்செல்வோர் சிலர்
ஏதுமில்லை என்றுசொல்லி கைவிரிப்போர் சிலர்
மனுசனாகக் கூடஎன்னை மதிக்காதோரே பலர்..
இரக்கம் என்பதிங்கே எங்கேதான் போனதுவோ
மயக்கம் வருகிறதே வாட்டிவதைக்கும் வெயிலினால்
உறக்கம் எனைவந்து பார்த்துப்பல நாளாச்சு
வழக்கம் போலயின்றும் பட்டினிதான் என்வயிறோ.....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
