ஓர் தாடிக் கவிஞன்
காதல் தோல்வி
எழுதிய கவிதைகளையெல்லாம்
எடுத்துப் புதைத்தான்;
கண்ணீர்த் துளியூற்றி
தாடி வளர்த்தான்
"மரிக்கும் வரை மழிப்பதில்லை" - என
நிறைவேற்றிய தீர்மானத்தைக்
கரையேற்ற முடியாமல்
பாதியில் கைவிட்டான்
முகம் தெரியா காரணத்தால்
முகத்தை மழித்துக் கொண்டான்
மனதை?
"அவசர சவரத்தில்
காயங்கள் சகஜம்
ஆண்- பெண் காதலில்
தோல்வியும் சகஜம்"
அவனுக்கு அவனே
ஆறுதல் கூறினான்
கொட்ட கொட்ட விழித்திருந்த
மனம் கேட்டது
வெட்ட வெட்ட முளைக்கின்ற
வாழைதான் காதலா?
அவன் யோசித்தான்
அவனது காதல்
ஆலமரமா? வாழைமரமா?