வாழ்க்கைப் போராட்டம்

முதியவர் ஆற்றங்கரையில்
வீசிக் கொண்டிருக்கிறார் தூண்டில்,
மீன்களோ சிக்கவில்லையே!

மேக மூட்டம் வானத்தில்
ஆற்றுப் பரப்பெங்கும் தூரல் – தனிமையில்
முதியவர் கரை ஓரத்திலே!

இயற்கையை வேண்டுகிறார்,
இறைவனிடமும் பிரார்த்தனை - ஆனாலும்
வானம் மௌனமாய் அழுகிறதே!

கிழிந்த ஒட்டுப்போட்ட குடையின்
கீழே முதியவர் மோனத் தவத்தில்,
சில மீன்களாவது சிக்க வேண்டுமே!

பசிக்கு உணவு வேண்டும்,
அவருக்கு உதவ, பிள்ளையுமில்லை,
உயிர் வாழ்ந்தாக வேண்டுமே!

இருள் சூழும் நேரம் - தூண்டிலில்
சிக்காமல் தூண்டில் புழுவை எடுக்க
மீன்களும் முயற்சிக்கின்றனவே!

வாழ்க்கைப் போராட்டம்! இருவருமே
வாழ்ந்தாக வேண்டும் – இதுவும்
இயற்கையின் ஓர் விளையாட்டே!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Apr-16, 2:36 pm)
Tanglish : vaazkkaip porattam
பார்வை : 275

மேலே