பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள்

கவிதை.

வானுக்கு நிலவு வேண்டும்
வாழ்வுக்குப் புகழ் வேண்டும்
தேனுக்குப் பலாச்சுளை வேண்டும் – என்
செங்கரும்பே நீ எனக்கு வேண்டும்.

மீனுக்கு பொய்கை வேண்டும்
வெற்றிக்கு வீரம் வேண்டும்
கானுக்கு வேங்கைப் புலி வேண்டும் – என்
கண்ணாட்டியே நீ எனக்கு வேண்டும்.

வாளுக்குக் கூர்மை வேண்டும்
வண்டுக்குத் தேன் வேண்டும்
தோளுக்குப் பூமாலை வேண்டும் – அடி
தோகையே நீ எனக்கு வேண்டும்.

நாளுக்குப் புதுமை வேண்டும்
நாட்டுக்கு உரிமை வேண்டும்
கேளுக்கு ஆதரவு வேண்டும் – என்
கிள்ளையே நீ எனக்கு வேண்டும்!.
ஆதாரம் ; பாரதிதாசன் கவிதைகள் தொகுப்பு – பக்கம் – 348.
தகவல் : ந.க.துறைவன்.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (29-Apr-16, 6:22 am)
பார்வை : 145

மேலே