உயிர்
என்னைப் பற்றி சிந்திக்க
நேரம் உன்னிடம் இல்லை
எந்தன் மதிப்பு என்னவென்று
உனக்குப் புரியவில்லை
எந்தன் இயக்கம் என்னவென்று
நீயும் அறிந்ததுண்டா
இருக்கும் வரைக்கும்
வாழ்க்கையை அனுபவிக்க
துடிக்கின்றாயே
ஆனந்தமாய் இருக்க
நினைக்கின்றாயே
அந்த மயக்கத்தில்
என்னை முற்றிலுமாய்
மறப்பது எவ்வகையில்
நியாயம்
ஒவ்வொரு நொடியும்
என்னைப் பற்றிய
நினைப்பை
உந்தன் மனதில்
பதிய வைத்தால்
உன் செய்கை யாவும்
சரியாய் இருக்கும்
எவ்விதத்திலும் நீ
தடுமாறாமல் இருப்பாய்
நானும் நீயும் ஒன்றாய்
இருப்பது ஏதோ சில
காலம் தானே
நீ ஒழுங்காய் இருந்தால்
நான் சுகமாய் இருப்பேன்
உலகின் இயக்கம்
"அவன்" கையில் என்றால்
உந்தன் இயக்கம் என்
கையில் என்பேன்
என்னிடம் ஏதாவது
நீ வம்பு செய்தால்
சோதனைக்கு உள்ளாவது
நீதான் முதலில்
உன்னை விட்டு நான்
பிரிந்து விட்டால்
இவ்வுலகில்....
நீயும் இல்லை,
நானும் இல்லை
சில சமயங்களில்
நான் இருப்பதை
மறந்து
நீ,
வெறும் ஜடமாய்
ஆகிவிடுகிறாய்
இருப்பினும் நான்
உன்னை மன்னித்து
விடுகின்றேன்
ஆரோக்யம், ஆனந்தம்
என்பது,
எனக்கு வைட்டமீன்
மாத்திரை போல
உந்தன் உடம்பு
அது என்னுடைய
வீடு
வீட்டை சுத்தமாய்
வைக்க நீயும்
உதவ வேண்டும்.
இதுவரை எப்படி
இருந்தாய் என்று
நான் கேட்க
விரும்பவில்லை
இனிமேல்
நாம் இருவரும்
ஒன்றாய் சேர்ந்து
அவனின் நாமம்
சொல்லிடுவோம்
அமைதி வாழ்க்கையை
வாழ்ந்திடுவோம்