கவிதை போன்றதொரு வாழ்க்கையை கடந்து சென்றுவிட்ட ஞானக்கூத்தன்-------------------எழுத்து காம் ---தமிழின் மூத்த கவிஞர் ஞானக்கூத்தன் காலமானார்

தமிழ் நவீனக் கவிதையின் மிக முக்கியமான கவிஞரான ஞானக்கூத்தன் மறைந்துவிட்டார். அவரது கவிதைப் பயணம் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் கடந்த 50 வருடங்களாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாறிவரும் சமூக மாற்றங்களின் போக்குகளை எவருக்கும் வளையாமல் எதற்கும் இசைந்து கொடுக்காமல் மிக நாசுக்காக நகைச்சுவையாக எள்ளலோடு கவிதைகளைப் படைத்தவர் அவர். நவீன கவிதைக்கு வேராகத் திகழ்ந்த ஞானரதம், ழ, கசடதபற, கவனம் ஆகிய சிற்றிதழ்களின் ஆசிரியர் குழுக்களில் தனது தீவிர பங்களிப்பை செலுத்தியவர்.

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பாரதியைத் தொடர்ந்து தமிழ்க் கவிதை மரபை பெரும்வீச்சோடு முன்னெடுத்தவர் பாரதிதாசன் என்றாலும் தமிழ் கவிதைக்கு சமகால நவீன மொழியை வழங்கியவர் ந.பிச்சமூர்த்தி.

மாறிவரும் உலக இலக்கியப் போக்கின் கண்ணியை அதன் வேகத்தோடு தமிழ் தன்னை இணைந்துகொண்டதற்கு தமிழிடமுள்ள வரலாறு ஒரு காரணம் என்றால் தக்க நேரத்தில் அதை முன்னெடுத்த அற்புதமான தமிழ் கவிஞர்களும் ஒரு காரணம் என்றுதான் சொல்லவேண்டும்.

ந.பிச்சமூர்த்தி, க.நா.சு, நகுலன், பிரமிள், ஆத்மாநாம், ஞானக்கூத்தன், பசுவய்யா, சி.மணி, எஸ்.வைத்தீஸ்வரன், விக்கிரமாதித்யன், ந.ஜெயபாஸ்கரன், கலாப்ரியா, கல்யாண்ஜி, தேவதேவன், தேவதச்சன் என்று செல்லும் இந்த வரிசை மொழியை வளம் சேர்ப்பதோடு சிந்தனையை செதுக்கவும் துணைநின்றது.

இவர்களில் பலரும் தத்துவம், தனிமை, ஆற்றாமை, காலம், இடம் என தேடலின் தீவிரத்தில் இயங்கியவர்கள்... இவர்களிலிருந்து நிறைய வேறுபட்டு நிற்கிறார் ஞானக்கூத்தன். எங்கள் தெரு கமலம் சைக்கிள் விட்டாள்... என்று தொடங்கும் அவரது கவிதை ஒன்று என்மேல் ஒருமுறை விட்டாள்.. மற்றபடிக்கு எங்கள் தெரு கமலம் சைக்கிள் விட்டாள் என்று முடியும் போது வாய்விட்டு சிரிக்கவைக்கக்கூடியது.

''மோசீகீரா உன்னைப் பெரிதும் மதிக்கிறேன். அரசுக் கட்டிலில் முதல்முதல் தூக்கம் போட்டவன் நீ யென்பதால்'' என்ற கவிதையில் நீண்டதூரம் நடந்துவந்த களைப்பினால் முரசு கட்டிலில் மீதேறி துயில் கொண்டுவிட்ட புலவர் மோசிகீரனார். இவர் புலவராயிற்றே அடடா என அவருக்கு அருகே நின்று தூக்கம் கலைந்துவிடாமல் கவரி வீசிய மன்னரின் பெருந்தன்மையைப் பற்றி ஏதாவது சொல்லப்போகிறாரோ என்று தேடினால் அதற்கு மேல் அவர் எழுதவில்லை. ஞானக்கூத்தன் பாடவந்தது, மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறையைப் பற்றியோ, புலவர் மோசிகீரனாரைப் பற்றியோ அல்ல என்பது நம் அரசு அலுவலக லட்சணங்களை நன்கு உணர்ந்தவர்களுக்குத் தெரியும்.

70களின் அரசியல் மேடைகளை கிண்டலடித்து இவர் எழுதிய பல கவிதைகள் பிரசித்தம். அவை பலமான எதிர்ப்புகளை இவருக்குப் பெற்றுத் தந்தன. அதேநேரத்தில் எதையும் எவருக்காகவும் தனது விமர்சனப் போக்கை மாற்றிக்கொள்ளாதவர் என்ற தெளிவையும் உலகுக்கு உணர்த்தின. கல்லூரி தமிழ் இலக்கிய வகுப்புகளில் பேராசிரியர்களின் கோபத்திற்கு அதிகம் ஆளானவர்களில் இக்கவிஞருக்கு முக்கிய பங்குண்டு.

அதற்கு காரணம் அவரது இந்தக் கவிதை. ''எனக்கும் தமிழ்தான் மூச்சு... ஆனால் அதை நான் பிறர்மேல் விடமாட்டேன்'' என்ற இக்கவிதை வரிகள் தமிழுக்கும் அமுதென்று பேர் அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் உயிருக்கு நேர்! வரிப்புலியே, இளந்தமிழா எழுந்திருநீ, என்றெல்லாம் கேட்டுப் பழகிய தமிழ் வாசகனுக்கு ஞானக்கூத்தனின் கவிதைகள் அதிர்ச்சியைத் தந்திருப்பதில் வியப்பில்லை. ஆனால் எழுபதுகளில் களைகட்டிய அரசியல் இயக்கங்களின் வெற்றுக்கோஷங்களையும் அதைவைத்துமட்டுமே அரசியல் நடத்திக் கொண்டிருப்பதையுமே அவரது ''எனக்கும் தமிழ்தான் மூச்சு'' கவிதை பகடி செய்தது என்பதை புரிந்துகொண்டால் குழப்பம் தெளியும்...

மேலோட்டமான உணர்ச்சிப்பெருக்கில் தன்னை கவிஞர்களாக நிலைநிறுத்திக்கொண்டவர்கள் மத்தியில் ஆழ்ந்த சங்க இலக்கியப் பயிற்சியோடு தனது படைப்புகளை வடிவரீதியாகவும் முன்னிறுத்தியவர். தமிழ்தமிழ் என்று சொல்லிவந்த அரசியல்வாதிகளின் போக்குகளை கடுமையாக விமர்சனம் செய்பவர் என்றாலும் இடஒதுக்கீடு, ஈழத்தமிழர் ஆதரவு போன்றவற்றில் முக்கிய பற்று கொண்டவர் என்பதை நாம் மறந்துவிடமுடியாது. இவரது முக்கியமான கவிதைத் தொகுப்புகள் அன்று வேறு கிழமை, கடற்கரையில் ஒரு ஆலமரம், பென்சில் படங்கள் போன்றவை.

இளங்கவிஞர்களை வாஞ்சையோடு அழைத்துப் பேசி அவர்களைப் பாராட்டி வழிநடத்தத் தவறியதில்லை. விமர்சனம் என்று வரும்போது எவ்வகை அதிகார பீடத்தையும் துணிச்சலாக எதிர்க்கவும் தயங்கிதில்லை. அதிகார மட்டத்திலிருந்து கிடைக்கும் விருதுகளுக்கு எதிரான இலக்கிய வாழ்க்கைப் பயணம் என்ற அவரது குணம் அனைத்தும் அவரது கவிதையைப் போன்றதே.

எழுதியவர் : (28-Jul-16, 4:57 pm)
பார்வை : 101

மேலே