ஏழையின் காதல்

(படித்த ஏழை மகன் பணக்கார பெண்மீது காதல் கொண்டு எழுதியது)
ஆம் இதுவும்
தாஜ்மகால்தான்
ஷாஜகானால்
பளிங்கால் கட்டப்பட்டதல்ல
இந்த
சாமானியனால்
பவழத்தால் கட்டப்பட்டது
சாமர்தியமாய்
பாசத்தால் கட்டப்பட்டது

இரு தூண்களை
மிதிலை
பட்டால் நெய்தேன்
மறு தூண்களை
மாதுளை
மொட்டால் செய்தேன்

ராட்சத கோபுரம் இரண்டையும்
வைடூரியத்தில் முடித்தேன்
ராஜகோபுரம் ஒன்றை
வைரத்தால் வடித்தேன்

முன் கதவு முத்தில்
பின் கதவு பிளாட்டினத்தில்
தரை மின்னும் தங்கத்தில்
திரை அன்னம் அங்கத்தில்

எதிரே குளத்தில் வெந்நீர் நிரப்பவில்லை
அவள் குளிக்க என் செந்நீர் நிரப்பினேன்

இது பெண் அவளை
அடக்கம் செய்யவல்ல
புது என் காதலை
தொடக்கம் செய்ய

இது மும்தாஜிக்காக அல்ல
என் முத்தாளுக்காக

உண்மையில்
இந்தக் கோட்டை
என் மனதிற்குள் மரித்துள்ளது
அதை என் மனச்சதை
காட்டாமல் மறைத்துள்ளது
இரு கண்கள் மட்டும்
காண முடியும்

ஒன்று அவள்
வெற்றிக் கண்
மற்றொன்று சிவன்
நெற்றிக் கண்

அவள் பார்ப்பாளா?
என்னோடு
கரம் கோர்ப்பாளா?

சிவனே உன் நெற்றியை
சோலையாக்கு
அவளைப் பார்த்து
என் காதல் வெற்றியை
மாலையாக்கு

இறைவா
நான் பணம் படைத்த
ஷாஜகானல்ல
நல்ல குணம் படைத்த
சாமானியன்

என் பழய சோற்றையும்
பகிர்ந்துண்ணும் பறவை நான்
என் கந்தலையும்
வாரி வழங்கும் பாரி நான்

அந்த முல்லைக்கு கொடுக்க
என்னிடம் தேரில்லை
அவள் பிள்ளைமனம் கவர
என்னிடம் காரில்லை

கிழிந்த பாயில் படுத்திருக்கேன்
அந்த
கிளியாம்பாள் வெருப்பாளோ?

ஓலக்குடிசயில் ஓரமா ஒளிஞ்சிருக்கேன்
அந்த
ஒபாமா மக ஒய்யாரமா வருவாளோ?

காசுதான் ஏழையா இருக்கு
என்
கல்வி அம்பானியா இருக்க
முயற்சி ஏணியா இருக்க
அது போதும் அந்த ராணிய காக்க

இறைவா
பணம் வேண்டாம் வரமாக
பணம்தான் அவளை நெருங்கவிடாது
நிறுத்தியது தூரமாக
அவள் மனம் வேண்டும்
எனக்கு தாரமாக..
அவள் மறுத்தால்
இருக்கமாட்டேன் நிலத்திற்கு பாரமாக

எழுதியவர் : கவிஞர் குமார் (7-Aug-16, 8:40 pm)
பார்வை : 1165

மேலே