மின்னல் விழியவள்

மின்னல் வந்து தாக்குதடி - உன்
மின்னிச் செல்லும் விழிகளிலிருந்து.
என்னைத் தாக்கும் நோக்கத்தில்
என் கண்ணிணூடே நுழையுதடி.

உள்ளேச் சென்ற மறுகணமே - என்னை
உருக்குழைத்து விட்டதடி.
மெல்ல மெல்ல என் மேனியெங்கும்
மெய்சிலிர்க்க வைக்குதடி.

என் செல்களுக்கெல்லாம் செய்வினை வைத்து
என்னை உன்வசம் ஆக்குதடி
உள்ளிருக்கும் ஹார்மோன்களை திரட்டி
உண்ணாவிரதம் இருக்குதடி.

பேச்சு வார்த்தைக்கு வரச்சொல்லி - என்னுள்
போராட்டம் நடத்துதடி
போகப் போக என் மனதை - காதல்
போதையில் தள்ளுதடி.

தூண்டில் சிக்கிய மீனாய் .- மனதை
துடிதுடிக்க வைக்குதடி
இதயக் கூட்டை இரணப்படுத்தி - அதில்
இன்பம் காணச் சொல்லுதடி

நித்திரையிலும் உன் நினைவு - என்னை
நிழல் போல் தொடருதடி
நிஜத்திலும் நான் உனைத் தொடர - என்னை
நிர்பந்தம் செய்யுதடி.

காற்று வீசும் திசையெங்கும்
காதல் வாசம் வீசுதடி
சுவாசிக்கும் காற்று கூட - உன்
சுயசரிதை சொல்லுதடி.

கண்ணில் பாய்ந்த மின்னல் கீற்று - புயலாய்
கரையை கடக்க துடிக்குதடி
காதல் மழையின் பெருவெள்ளம்
கண்ணீராய் வழிந்தோடுதடி..............

எழுதியவர் : தங்கமணிகண்டன் (11-Sep-16, 11:25 am)
பார்வை : 91

மேலே