ஏழ்மையின் எதிர்பார்ப்பு

ஏழ்மையின் எதிர்பார்ப்பு
பாவலர் கருமலைத்தமிழாழன்

வாழ்க்கையிலே அமர்தற்குச் சிறிய வீடு
----வயிறெரிக்கும் பசிதணிக்கக் கொஞ்சம் சோறு
தாழ்ந்திடாமல் மானத்தைக் காப்ப தற்குத்
----தகுவுடலை மறைப்பதற்குக் கீழ்மேல் ஆடை
வீழ்ந்திடாமல் தலைநிமிர்ந்து நிற்ப தற்கு
----விளங்குகின்ற அடிப்படையாம் இந்த மூன்றே
ஏழ்மையிலே தவிக்கின்ற மக்கள் எங்கள்
----எதிர்பார்ப்பாம் இவைகிடைத்தால் வாழ்வோம் நாங்கள் !

பிச்சையாக இலவசங்கள் தேவை யில்லை
----பிறக்கின்ற கருணையதும் தேவை யில்லை
முச்சந்தி தனில்நின்று கையை ஏந்தி
----மூச்சுவிடும் வாழ்க்கையினை விரும்ப வில்லை
கச்சிதமாய் மதிப்பளித்துப் பணிகொ டுத்துக்
----கரங்களிலே உழைப்பதற்கு வழியை செய்தால்
நிச்சயமாய் ஏழ்மையினை ஓட வைத்து
----நிறைவாழ்வு வாழ்ந்திடுவோம் வாய்ப்ப ளிப்பீர் !

மாளிகையின் வசதிகளைக் கேட்க வில்லை
----மகிழுந்து சொகுசுதனைக் கேட்க வில்லை
கேளிக்கைப் பொழுதுபோக்கைக் கேட்க வில்லை
----கேள்விக்கு விடைதேடும் எங்க ளுக்கு
வாலியினை மறைந்திருந்து கொன்ற போல
----வளங்களினை சுருட்டுகின்ற கரமி ருந்து
கூலிக்காய் உழைக்குமெங்கள் உழைப்பிற் கேற்ற
----கூலிதந்தால் போதுமெங்கள் ஏக்கம் தீரும் !

எழுதியவர் : பாவலர் கருமலைத்தமிழாழன் (13-Oct-16, 10:08 am)
பார்வை : 250

மேலே