உண்மையில் சுதந்திர்ம் பெற்றோமா

சுதந்திரம் காக்க உறுதி ஏற்போம்
பாவலர் கருமலைத்தமிழாழன்

சாக்கடையாய் நாடுதனை மாற்று தற்கா
----சாந்தமூர்த்தி விடுதலையைப் பெற்ற ளித்தார்
தீக்கனலாய் வன்முறையை எரிய வைத்துத்
----தீய்ப்பதற்கா வஉசி செக்கி ழுத்தார் !

தாக்குகின்ற சாதிமதம் வளர்ப்ப தற்கா
----தன்னுடலில் தொழுநோயைச் சிவாவும் பெற்றார்
ஏக்கத்தில் மக்கள்தாம் வாடு தற்கா
----ஏந்திகொடி குமரனுமே உயிரை விட்டார் !

வளந்தன்னை ஊழலிலே சுருட்டு தற்கா
----வாஞ்சிநாதன் ஆட்துரையைச் சுட்டுக் கொன்றார்
அளவின்றி அரசியலார் சொத்தைச் சேர்க்கவா
----அல்லலினைத் தீர்த்தகிரி சிறையில் ஏற்றார் !

பளபளக்க ஆட்சியாளர் பவனி வரவா
----பட்டினியில் பாரதியார் பாடல் யாத்தார்
களவுகொள்ளை அதிகார ஆர்ப்பாட் டங்கள்
----காண்பதற்கா வெள்ளையனை ஓட வைத்தார் !

அந்தமானில் கல்சோறு உண்டு முன்னோர்
----அரும்உயிரில் பெற்றளித்த அருமை நாட்டை
சொந்தநலன் ஒன்றிணையே கொள்கை யாக
----சேர்ந்துசிலர் அழிப்பதனைக் காண்ப தோநாம் !

அந்நியனை விரட்டுதற்கே ஒன்று சேர்ந்து
----அடக்குமுறை எதிர்த்திட்ட முன்னோர் போன்று
முந்திநின்று கயவரினை வீழ்த்தி நாட்டை
----முத்தாக ஒளிரவைக்க உறுதி ஏற்போம் !

எழுதியவர் : பாவலர் கருமலைத்தமிழாழன் (13-Oct-16, 10:17 am)
பார்வை : 332

மேலே