சிகரம் தொட சிறகுகள் தேவையில்லை

எழுந்திரு தோழா !
வாய்ப்புக்கள் ஏராளம்
உன் வாசலில் வந்துநிற்க
நீயோ தவறவிட்ட வாய்ப்புக்களையும்
இழந்துவிட்ட வெற்றிகளையும்
நினைத்து கவலைப்படுவதேன்?

காலங்கள் ஏற்படுத்தின
காயங்களுக்கு
உன் தன்னம்பிக்கையே
மருந்தாகட்டும் ....
துணிச்சலோடு எழுந்திரு !

சறுக்கல்கள் இல்லாத
வாழ்க்கையில் சுவாரஸ்யமிருக்காது ....
தோல்விகளுக்கு பதிலடி
கொடுக்க துணிந்தெழு !

நீ நினைத்தால்
கடலும் துளியாகும்
உன் விரல்கள்
ஒவ்வொன்றும் உளியாகும் ....
உனக்கான எதிர்காலத்தை
நீயே செதுக்கு .....
முடியாது என்ற வார்த்தையை
உன் அகராதியிலிருந்து ஒதுக்கு ...

உயிர் மூச்சிருக்கும் வரை
முயற்சி செய் ..
நினைத்ததை முடிக்கும் வரை
பயிற்சி செய் ..

உன் வெற்றி பயணத்தில்
தடையாக பெரும் படை
வந்தாலும் கலங்காதே ..
தடைகளை தாண்ட தயங்காதே ...
உன் இலக்கின் தூரம் கண்டு மயங்காதே ..

எல்லாம் தொட்டு விடும் தூரம் தான்
துணிந்தவனாயிரு...
துணிந்தவனுக்கு பாதாளத்திலும்
பாதைகள் அமையும்
பயந்தவனுக்கோ பாதைகள் கூட
பாதாளமாய் தெரியும் ...

கருத்தாய் கனவு கண்டு
எண்ணத்தில் உயர்வு கொண்டு
சிந்தையில் தெளிவு கொண்டு
செயலில் துணிவு கொண்டால்
தொட்டுவிடும் தூரம் தான் சிகரம் ...

சிகரம் தொட சிறகுகள் தேவையில்லை ....

எழுதியவர் : மோனிஷா.A (21-Nov-16, 3:14 pm)
பார்வை : 232

மேலே