குரும்பலூர் பேரூராட்சி
முட்டிக்கால்சேற்றில் கொறவைமீன் பிடித்த
சிவன்கோவில் தெப்பக்குளம் தூர்ந்து போய் வெகுநாளாயிற்று…
தார்சாலைகளில் வெதுவெதுப்பாய் மாட்டுசானம்பார்த்து பலவருடமாயிற்று
வீட்டுக்கு வெள்ளையடிப்பது அவுட்டாப் பேஷனாகிவிட்டது…
ஒருவார பொங்கல் பண்டிகை உற்சாகத்தை
கலைஞரும், சன்னும் களவாடி கொண்டுவிட்டார்கள்…
சாலைகளில் பளிச்சிடும் வண்ணங்களில் உடையணிந்த தாவணிப் பெண்கள்
இன்று காணாமலே போய்விட்டனர்…
சிறுவர்களின் கில்லி ஆட்டம்,பாண்டி ஆட்டம்,ஐஸ்பாரி, போன்றவை
சந்தர்ப்பங்களால் தற்கொலை கொண்டுவிட்டன….
கற்களால் அடுப்புகட்டி விறகுபுகை கண்கலங்க வைத்து மண்பானையில் பொங்கலிட்டது அரிதாய் போய்…
எரிவாயு அடுப்பும், தொடுதிரை விளக்குகளும் எங்கள் கலாச்சாரமாயிற்று…,
பட்டுசாமி பொண்ணையும் காசாம்பூ பையனையும்
இலகுவாய் அடையாளபடுத்திக்கொண்ட பழக்கம் அழிந்துவிட்டது…
மறைவாய் விளையாடச்சென்ற மாரியாத்தா கோவில் புளியந்தோப்பு
மதுபானக் கிடங்குகளின் கிளையாகவே மாறிவிட்டது…
எல்லை காவல்தெய்வம் ஆலடி முத்துசாமியைச் சுற்றி சன், டாட்டாஸ்கை
எங்கும் காணாதபடி பயிர்விளைச்சல் அமோகம்…
மரவள்ளி கிழங்கு, சுருளி கிழங்கு,சக்கரை வள்ளி கிழங்கு,கடலை மிட்டாய் விற்ற பாட்டிகளும்
ஆலமரத்தடியும், அரசமரத்தடியும்,சடுதியில் மறைந்து விட்டன…
விரல் முனை சுண்ணாம்புக்கறை பெரியவ்ர்கள் காணாமல் போய்
உள்ளங்கையில் ஹான்ஸ் தேய்க்கும் இளைஞர்கள் வந்து விட்டார்கள்…
ஒற்றைரோஜாவை ஓரத்தில் வைத்து நடந்தாள் அவள் தாசி என்று உருவகபடுத்தியவர்கள்
லோ ஹீப்பையும்,லோ நெக்கையும் ஏற்றுக்கொண்டு விட்டார்கள்…
முப்பதே குடும்பங்கள் வாழ்ந்த கிராமம்…
மூவாயிரம் நகர்களாய் விரிந்து கிடக்கின்றது….
எல்லாம் படிப்படியாய் மாறி...
மாறாமல் இன்னும் துருபிடித்த வண்ணம் நிற்கின்றது…
“குரும்பலூர் பேரூராட்சி”
“தங்கள் வருகைக்கு நன்றி” - என்ற கிராமத்தின் பெயர்கொண்ட பலகை மட்டும்தான்…