விலைமகள்

***விலைமகள்***
_____________________

இராப் பகலுக்கு புரியாத
பொழுதொன்று போர்த்திக் கொண்ட
போக்கத்தவள்
இரவின் மடியிலும்
பகலின் பகட்டிலும்
பதுங்கிக் கொண்டவள்

விலை பேசி விற்கப்பட்ட
பொருளொன்றாய்
வீதியிலும் விடுதியிலும்
காமுகனின் விளையாட்டு
பொம்மையானாள்
பெண்மை பறி போனது
அறிந்தே தான் தொலைந்தாள்.

நேரத்திற்கு விருந்துண்டு
நேரகாலமின்றி விருந்தானாள்
விரும்பாமலே வந்து மாட்டிக் கொண்டாளோ...?
விலை மகளாய் விரும்பியே தான்
வதைகிறாளோ..?

விதியும் நொந்து கொள்ள
சதியும் சூழ்ந்து கொள்ள
பத்தினித் தன்மை இழந்தாள்
பணம் தான் காரணமோ..?
பசிதான் வயிற்றை நிரப்பியதுவோ...?
பாவையின் பதில் தான் எதுவோ..?

பேதையவளின் பேச்சுக்கிடமில்லை
பேரம் பேசி விற்ற இந்த பூமியிலே

விலைமகள் விலையாகிப் போனாள் விருந்தாக்கி மகிழ்ந்தார்கள்...

#அஸ்க்கியா முபாறக்

எழுதியவர் : M.F.Askiya (18-Jan-17, 12:32 pm)
Tanglish : vilamakal
பார்வை : 153

மேலே