ஒவ்வொரு நாளும் தொடரும் வலிகள்

காற்றலையில் மிதந்து வரும் செய்திகளில்
காகித முகங்களின் சாயங்கள் வழிகிறது...
கானல் நீராய்த் தொடரும் காட்சிகளில்
காணும் விழிகள் மயங்கிப் போகிறது......

காதல் பெயரில் கௌரவக் கொலைகள்
காதலி முகத்தில் அமிலப் பொழிவுகள்
கன்னங்களைக் கரைத்திடும் வெந்நீர்த் துளிகள்
கடந்திடும் நொடிகளை யுகமாய் நகர்த்துகிறது......

மறுவேளைச் சோற்றுக்கு வழியின்றி ஏழைகள்
மயங்கும் நிலையில் வங்கியின் வரிசையில்
மர்மமான முறையில் புதிய ஆயிரங்கள்
மலையாய் குவிகிறது செல்வந்தன் வீட்டிலே......

மழை இல்லாது வாடும் பயிர்களில்
மனம் உடைந்து மண்ணில் சாய்ந்திடும்
ஏரோட்டும் விவசாயியின் தொடர் மரணத்தில்
எதிர்காலம் இன்றே இறந்தும் போகிறது......

நாயகனாய் உலா வரும் சிலரால்
நாட்டின் பொக்கிசம் வெளிநாட்டில் விற்கப்படுகின்ற
சிலைக் கடத்தலில் வெளிவரும் நிகழ்வுகள்
மழைச் சாரலாய் சிலிர்க்கின்ற உண்மைகள்......

எழுதியவர் : இதயம் விஜய் (20-Jan-17, 12:08 pm)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 69

புதிய படைப்புகள்

மேலே