மைனாவின் மனதினிலே - தெம்மாங்கு பாடல்
மைனாவின் மனத்தினிலே
மாமன் என் நினைவுகளே
மனசெல்லாம் மயங்குதடி
மாமன் கிட்ட வாடி புள்ள !
உனக்காக மல்லிகைப்பூ
உன்ன நெனச்சும் வாங்கி
வந்தேன் . தலையிலே
வச்சுவிட நானிருக்கேன் !
கைவளையல் கழன்றிடுமே
கால்கொளுசும் எனைத்தேடும்
மெல்ல மெல்ல நடந்து வந்து
மேனியெல்லாம் சூடாக்கு புள்ள !
அக்கம் பக்கம் யாருமில்ல
அணைச்சுக்கலாம் ஆசையோட
கெஞ்ச வச்சும் பார்க்காதடி மானே !
கொஞ்சலாமடி என்கிட்ட வாயேன் !
மகரந்தப் பூவாசம் மைனாவின்
கொண்டையிலே ! மாமனையும்
மயக்குதடி கள்ளி ! மருதாணி
கை நிறைய வையேன் !
உன் சிவப்பான தேகத்துக்கு
சின்னாளப்பட்டும் வாங்கித் தாரேன்
சிலுசிலுக்கக் கட்டிக்கிட்டு
சிந்தையத் தூண்டுகின்றாய் செல்லம் !
என் நினைவாலே நீ வாட
உன் நினைப்பும் எனை வாட்ட
அந்திசாயும் நேரத்துல
ஆத்தங்கரைப் பக்கம் வாடி புள்ள !
உன்னழகு மேனியில
உருகிவிழும் பனித்துளியாய்
மண்ணில் பெய்த நீர்த்துளியும்
மாமன் காதல் சொல்லுமடி !
உனக்காக வாழுமடி என் உயிரும்
உன்ன எண்ணி சாகுமடி நீ சொன்னா
அதுக்காக பிறக்கவில அன்பே !
ஆசையோட வாழ்வோமடி மைனாவே !
ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்