சிந்தனை உறக்கம்

சிந்தனை உறக்கம்!
=================

இறைந்துண்டு வாழும் வாழ்க்கையானாலும்..
இறவாப் பசியென்பதனைவர்க்கும் இயற்கைதானே..!

சதைரத்தம் எலும்புடன் உடலென்றாலங்கே
பசிமயக்கம் உறக்கமென்பதும் உடன்பிறப்பன்றோ?..

உறக்கத்துக்கு உரிமைக்குரல் தேவையில்லை..
ஊணுறக்க மில்லையேல் உயிர்களுமில்லையப்பா..!

மாலைச் சூரியனின் கருணையினால்..
மணற் படுக்கையிலென் கவலைமறந்துவிட..

வெட்டாந்தரை இடம்தான் நானுறங்கும்
கட்டாந்தரை..நீர்வற்றிருகிய நிலமேயென்சொர்க்கம்!

துணிக்குடையின் கொடையால் தந்நிழல்தர..
துயிலெழ மனமில்லா மதிமயக்கம்தனில்..

உறவொன்றுமில்லையடா உறக்கம்தான் சொந்தமடா
ஊர்திரிந்துஉடல் களைத்துறங்கிக் கிடக்கிறேன்..!

அவனியில் படுமின்னலிலே யானும்..
அகதியாகி அயர்ந்துறங்கிக் கிடக்கின்றேன்..!

வண்டினம்வாழ பண்புடை மலர்போல..இங்கு
வறியவர்க்குதவும் குணமுடை யோரில்லையப்பா,,!

ஈகைமிகு தென்றலும் மேகமுடன்சேர்ந்ததால்..
இதமாகவென் பசியும் அடங்கிப்போனதே..!

இல்லாதவனைக் கண்டுகொளா தேசத்தின்..
இனம்காணா நினைவலையில் உறங்குகிறேன்..!

பசியுறக்கம் நிரந்தர வரமேயானாலும்..
பாரிலில்லை ஆருக்கும்பசிபோக்கும் மனப்போக்கு..!

பாவம்வயிறு செய்த தவறுதானென்ன..
தினம்வறுமை தானெனை வாட்டிடுதே..!

வயிற்றுக்குச் சோறிட வேண்டும்..
இங்கும் வாழும் மனிதர்க்கெல்லாம்…என

மஹாகவியின் கவிப்பசியறிந் தாங்கே..
மகத்தான சிந்தனைக்கே அடிபணியவேண்டுமப்பா..!

மண்குடிசை வாழ்வு நிலையென்றால்..
மண்ணிலென் வறுமைதீரும் நாளெப்போது?..

இல்லையெனும் சொல்லேயிலாமல் இருந்திருந்தால்..
இயல்புவாழ்க்கை யாவர்க்கும் எளிதாகுமப்பா..

நிறைவுடனே நானிலத்தில்நாம் வாழநித்தம்..
இறைவனிட மதையேமண்டியிட்டு வேண்டிடுவோம்..!

உறக்கத்தினாலென்னுடல் மண்ணைத் தொட்டாலும்..
விழித்தெழும்போதென் சிந்தனைகள் விண்ணைத்தொடுமப்பா..!

வல்லமை படக்கவிதை போட்டிக்கு அனுப்பட்ட கவிதை..

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (26-Mar-17, 8:49 pm)
பார்வை : 193

மேலே