என்ன நிகழ்ந்தது எனக்குள்

என்ன நிகழ்ந்தது
எனக்குள்

வெறித்த பலவற்றை
விரும்பி ரசிக்கிறேன்

அழகற்றது கூட
அழகாய் தெரிகிறது
கண்களுக்கு

பிடிக்காத கவிதை நூல்களை
இப்போது தேடி படிக்கிறேன்
என் அலமாரியில் கூட
ஒட்டி கொண்டன அவை

மேலோட்டமாக மெட்டுக்காக
கேட்ட பாடல்களை
ரசித்து முணுமுணுத்துக்
கொண்டிருக்கிறேன் ஓயாமல்
இசையை தாண்டிய வரிகளை
உள்வாங்க தொடங்கியது என்
இதயமும் இளமையும்

வருடக்கண்ணக்காய் பார்த்த
வானம் இப்போதெல்லாம்
ஓவியமாய் தெரிகிறது
வெண்மேகங்களின் நடனத்தை
வெகுளித்தனமாக ரசிக்கிறேன்

இரவில் மொட்டைமாடியில்
இருள் மறந்து
மவுனமாய் பேசுகிறேன்
மழலையாய் நிலவோடு

நீர்குமிழியை பிடிக்க
ஓடும் குழந்தையாய்
வானத்து விண்மீனையும்
வளைத்து பிடித்திட
துள்ளுகிறது மனசும்
துயில்மறந்த விழிகளும்

பிடிக்காத தனிமை
பிடித்து போனது
தனிமையின் கூண்டுக்குள்
தானே அடைந்துகொள்கிறேன்
தூக்கணாங்குருவி கூடாய்

நீண்டு தொடர்ந்து வரும்
நிழலையும் ரசிக்கிறேன்
நீயாக இருந்தால் என்ன
என்று நினைத்தபடி

என்ன நிகழ்ந்தது
எனக்குள்

என் விழிகள்
என்னையே புதிதாக
ரசித்து பார்க்கிறது

என் உதடுகள்
என்னை நினைத்ததே
சிரித்து கொள்கிறது

இரும்பு போன்ற
என் இதயத்துக்குள்
இலகுவாய் வந்து
ஒளிந்து கொண்டாய்

மாயக்கண்ணாடி அணிந்த
தேவதையாய் மாறிப்போனேனோ
கண்முன் காணும்
காட்சி அத்தனையும்
அழகே அழகாய்
என் உலகம்
அழகானது உன்னால்

மாய மந்திரகாரியாய்
மாறிப்போனது மனசு
உன் பேர் மட்டும்
சொல்லி கொண்டிருக்கிறது

காலை முழுவதும்
உன் நினைவுகளை
பிடித்துகொண்டு
நடந்த என் விரல்களை
வெற்றி கண்டது
என் கனவுகள்
விடியும் வரை
தோள் சாய்த்து
விடாமல் இருந்தாய்
நீ என் விரல்களை

உன் நினைவுகளோடு
நடக்கும் பகலைவிட
பொய் என்றாலும்
உன்னோடு வாழும்
இரவுகளை விரும்ப
ஆரம்பித்தான் அதிகமாய்

நேற்றுவரை நான்
பார்த்த உலகில்
நீ இல்லை
இன்று நான்
பார்க்கும் உலகில்
நீ மட்டுமே
இருக்கிறாய்
எல்லா பக்கமும்

...மண யாழினி ...

எழுதியவர் : மண யாழினி (28-May-17, 2:34 am)
சேர்த்தது : யாழினி வளன்
பார்வை : 152

மேலே