அழகே அழகு எதுவும் அழகே

பூவில் உறங்கும் பனியில் விரியும்
*****பசும் புல்வெளி அழகு...
கோவில் திருவிழாவில் கூடி மகிழும்
*****சொந்த உறவுகள் அழகு...


நிலவின் ஒளியை விளக்காய் வாங்கும்
*****கூரை வீடுகள் அழகு...
உலகமே வியந்து நோக்கும் தூக்கனாங்
*****குருவிக் கூடுகள் அழகு...


தந்தையின் மார்பில் தவழும் மழலையின்
*****கொஞ்சும் மொழி அழகு...
முந்தானையில் குழவியின் முகம் மறைத்து
*****தாலாட்டும் தாய்மை அழகு...


ஆடை துறந்து ஆற்றில் குதிக்கும்
*****சிறுவர்களின் குளியல் அழகு...
ஓடையில் தூண்டிலிட்டுச் சிலையென நின்று
*****மீன் பிடித்தல் அழகு...


ஈர நிலத்தில் ஏரினை இழுக்கும்
*****காளை மாடுகள் அழகு...
தூரமாய் விரட்டினாலும் விளைந்த வயல்
*****அமரும் பறவைகள் அழகு...


பார்போற்ற உழைத்துச் சேறு பூசிய
*****உழவனின் உடல் அழகு...
நேர்வகிடு நெற்றிப் பொட்டோடு மங்கையின்
*****மஞ்சள் வதனம் அழகு...


மறையும் கதிரோடு மலர்ந்து குழல்
*****மணக்கும் மல்லிகை அழகு...
இறைவன் தந்த யாக்கை மனதால்
*****இரசிக்கும் யாவுமே அழகு...

எழுதியவர் : இதயம் விஜய் (1-Jun-17, 2:37 pm)
பார்வை : 560

மேலே