கிறுக்கியின் கிறுக்கல்கள் - 09

உன் விழித்திரையில் விழாத
என் வீட்டு வண்ணக்கோலம்
விதவைக்கோலம் பூண்டிருக்கிறது..!
***
வெறும் புள்ளிகளிட்டு
என் வாசலை நிரப்பியுள்ளேன்
நீ உன் பார்வையிட்டு
வண்ணக்கோலமாக்கி
நிறைவு செய்துவிடேன்..!
***
வாசலிலிட்ட புள்ளிகளோடு
புள்ளியாக நானும்
சிதறித்தான் கிடக்கிறேன்
உன் புன் சிரிப்பை சிந்தி
சீர் செய்துவிட்டு போயேன்..!
***
இப்படியும் அப்படியுமாய் இழுத்து
எப்படியோ இணைத்துவிட்டேன்
அப்படியும் இப்படியுமாய்
நீ கடக்கையில் கிடக்கும்
இக்கோலம் உன் அதியழகுப்புன்னகையில்தான்
தன்னை அலங்கரித்துக்கொள்கிறது..!
***
குறும்புப்பார்வை வீசுகிறாய்
நாணுகிறேன் நானிட்ட
புள்ளிகளோடு நானும்..!
***
நிறைவு செய்யப்படாத கோலம் நான்
எண்ணங்களை இணைத்து
உன் வண்ணங்களை
என் கன்னங்களில் எழுது..!

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (4-Jul-17, 1:50 pm)
பார்வை : 194

மேலே