மழைக்காலம் அவளுக்கானது

[] மழைக்காலம் அவளுக்கானது ...
---------------------------------------------------------

அவள் -
குடை விரிக்கும் வரை தான்
அது மழை
விரித்த பின் விழவதெல்லாம்
கண்ணீர் ..!

எல்லோரையும் தொட்டு
நனைக்கின்ற மழை
தான் நனைவதற்காக
அவளை தொடுகிறது ..!

அவளில்
நனைந்த துளிகளை உறிஞ்சியும்
நனையாதவற்றை புதைத்தும்
கொள்கிறது மண் ..!

ஆகாயம் தந்து
ஆதாயம் தருவற்காக
வந்த மழை
ஆகாயத்தை மீறி
ஆதாயத்தை தேடி
வந்துகொண்டிருக்கிறது
அவள் பிறந்த நாள் முதல் ..!

மனிதனை விடவும் ஆவலாக
மழை தான்
எதிர்பார்த்து கொண்டிருக்கிறது
மழை காலங்களையும்
பருவ காலங்களையும்
அவள் பருவம் வந்த நாள் முதல் ..!

மழையால் காய்ச்சல் வருமென்று
நனைந்த யாருக்கும் தெரியும்
மழைக்கும் காய்ச்சல் வருமென்பது
அவளை தெரிந்த
எனக்கு மட்டுமே தெரியும் ..!


- யாழ் ..

எழுதியவர் : யாழ் கண்ணன் (7-Jul-17, 1:34 pm)
பார்வை : 307

மேலே