தாயே பூமி தந்தையே வானம்

என்னை தாங்கும் தாயே...
என்றும் என்பூமி நீயே...
என்னை காக்கும் வானம்
என்றென்றும் என் தந்தையே...

மலருக்கு தேன் தந்த
மனித பறவைகள் நீங்கள்தானே..!
மனதுக்கு மதி தந்த
மாய கலைகளும் நீங்கள் தானே..!

உயிருக்கு மெய் தந்த
உறவின் தொடக்கம் நீங்கள்தானே..!
உணர்வுக்கு உருவம் தந்த
உலகின் உன்னதம் நீங்கள்தானே..!

கண்ணுக்கு இமையாக
கடலுக்கு அலையாக
கனவிலும் பாதுகாத்த
காவல்தெய்வமும் நீங்கள்தானே..!

மண்ணோடு போட்டிபோட்டு
மரமாகும் விதையாக
என் மீது அன்பு காட்ட
எத்தனை போட்டிகள் உங்களுக்குள்ளே..!

விண் மீது அலையாடும்
விண்மீனின் எண்ணிக்கையாக
என் வாழ்வு சிறப்பாக
எத்தணை தியாகம் உங்களுக்குள்ளே..!

என்னால் முடியாது
எந்நாளும் முடியாது
உங்களுக்கு கைமாறாக
உலகம் விற்றாலும் முடியாது..!

என்னால் முடியாது
எந்நாளும் முடியாது
உங்களோடு இல்லா நாளில்
உலகம் எனக்கு விடியாது..!

எழுதியவர் : ந.இராஜ்குமார் (22-Aug-17, 5:47 pm)
பார்வை : 976

மேலே