ஊரே தாங்காது
தடை தாண்டி நீ ஓடு
தடம் மாறாமல் நீ ஓடு
விழுந்தவுடன், விதை போல
திரும்பவும் எழுந்தோடு.
அலை கடலும் கரை புரளும்
அதுவும், ஓர்நாள் ஊர் சேரும்
சினம் தகர்த்து மனம் மாறு
சிந்தித்துச் செயல்படு.
மடை உடைத்த காட்டாறு
மனசை நீ கேட்டுப்பாரு
எதிர் நின்று யார் தடுப்பார்
எதிர்த்து நீ போராடு.
முரட்டுக் காளை பின் வாங்காது
புறம் சொல்லை மதிக்காது
முடிவெடு, முதல் அடி எடு
முந்தி ஓடி முன்னேறு.
அலை கடலில் தடை ஏது
ஆழ் கடல், அதில் விளையாடு
அடுத்தவரின் அன்பு தான்
வேறெதற்கும் மனம் பணியாது.
குருதி தீ ஆறாது
இருண்டும் கண் உறங்காது
சாது அது மிரண்டால்
காடும் தாங்காது.
காட்டுத் தீ அது ஆறாது
அழிந்தாலும் அனல் ஓயாது
ஒருநாள், பொறி பறக்கும்
ஊரே அதை தாங்காது.