நீயும் நானும் பெண்மையும் ஆண்மையும் இயற்கையின் மடியில்

எங்கோ?
இயற்கையும் நாமும் மட்டுமே
ஓர் பிழையில்லா வான்வெளி இரவின் நிழலில்..
சப்தமில்லாமல் மணலோடு
உறவாடும் அலைகளின்
காதல் கரையில் ...
ஒரே ஓர் வீடு!
உன் கால் விரல்களை
சொடுக்கவும் வரம் வேண்டும்!
எனக்கு
இருபாதங்களின் நடுவில் இதழ்களை பதிக்கும் இரவும் வேண்டும்!
சுட்டு விரல் தொடங்கி
உச்சந்தலை வரை
தொடரும் கனவுகளை
கண்களில் கண்டேன்!
மனதில் இல்லா பொய்களை
மையோடு விழிகளில் கோர்க்கும்
வித்தையோடு நீ!
பொன் வெள்ளி நிலவு
உன் விரல்களின் நகங்களில்
பிறையாய் பதிவதை...
அதை என் முத்தங்களால்
முழுமை செய்ததை
நாணி அகலும்
விழிகளில் நான் காணும்
நாள் வேண்டும்!
உன் அச்சத்தால்...
சிக்கில்லா கூந்தலில்
சிக்கிடும் என் விரல்கள்
நீ சூடிய மல்லிகைக்கு
என் காதலால்
மரணபயம்
வரவும் வேண்டும்!
மழை தின்னும் விதைப்போல்
ருது புணரும் தேனீபோல்
நதியின் அலையை தாலாட்டும்
தென்றல்போல்
நீயும் !நானும் !
பெண்மையும்! ஆண்மையும்!
இயற்கையின் மடியில்....
இல்லறம்!

எழுதியவர் : சுரேஷ் குமார் (18-Sep-17, 11:58 pm)
பார்வை : 170

மேலே