எந்திர வாழ்க்கை

எந்திர வாழ்க்கை..!
=================

காலை எழும்போதே கணிணியைக் கையில்
..........கட்டிக் கொண்டே கண்விழிக்கும் அவலநிலை.!
மாலைநேரம் வேலை முடிந்து திரும்பினாலும்
..........மலைபோலக் குவியும்நம் அலுவலக வேலை.!
வேளைக்கு அவசரமாக உண்டபின் அலுவலக
..........வேலையைக் கடுகிமுடிக்க எழும் மனக்கவலை.!
களைப்பாற நேரமில்லை..! தகுந்த இடமில்லை..
..........கண்டதெலாம் நாகரீக நகரமாகிப் போனதாலே.!

சற்றுநேரம் எந்திரவாழ்வில் கிடைத்து விட்டால்
..........சங்கடத்தில் மனமது ஓய்வுகொள்ள நினைக்கும்.!
பற்றுடனே மனமெதிலும் ஈடுபாடு கொள்ளாது
..........படபடப்புடனே எப்போதும் நிலைத் திருக்கும்.!
கற்றறிந்த மானிடர்க்கு மனத்தில் தோன்றுமிடர்
..........கடக்கும் வழியறிய வாழ்வில்பல வழியுண்டாம்.!
எற்றைக்கும் இந்நிலை வாழ்வில் நீடிக்காதென
..........எண்ணும் போதிலெ மனமும் அமைதியாகும்.!

உதிக்கின்ற கதிரவனுக்கு முன்னெழ வேண்டும்
..........உலகம் சுழல்வதுபோல் நாமும் சுற்றவேண்டும்.!
அதிகாலை எழுந்து நடைபயில முடியவில்லை
..........ஆவலுடன் அலுவல் நோக்கி ஓடவேண்டும்.!
மதியமைதி பெறுதற்கு இயற்கையெழில் சூழ்நிலை
..........மனிதருக்கே வேண்டுமப்பா இக்கலி யுகத்தில்.!
இயற்கையின் இன்பத்திலென் மனம் மூழ்குதப்பா
..........இறைவன் படைப்பில் எத்தனை அற்புதமப்பா.!

===============================================
நன்றி:: வல்லமை படக்கவிதையில் பங்கு பெற்றது

நன்றி படம்:: கூகிள் இமேஜ்

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (14-Nov-17, 7:58 pm)
பார்வை : 158

மேலே