நிசப்தத்தை விழுங்கிய இரவுகள் - 02

பத்திரமாய் உன்னை ஈன்றெடுக்க
பத்தாம் திங்கள் காத்திருக்க
உத்திரத்தில் தொட்டில் கட்டி
ஒத்திகையும் நான் பார்த்திருக்க
உதிரமது மடிநனைத்தே
கனவென்று கத்திச்சொல்கிறது

நீ உடைந்துபோகும்போதெல்லாம்
உயிரில் உளி வைத்து
எனை சிதைப்பதாய் உணர்கிறேன்
உறக்கத்தை நனைத்து உருக்கமாய் பிழிகிறேன்
கனவொன்றில் நீ கண்விழிக்க
மீண்டும் நான் பிழைக்கிறேன்

மாதவிலக்கு விலகிடவேண்டுமென்றே
மாதமெல்லாம் வேண்டிக்கிடக்கிறேன்
அம்மூன்றுநாட்களை ஒத்திவைத்து
உன்னை பொத்திவைக்கத்தான்
எதிர் பார்த்திருக்கிறேன்

உள்ளிருந்து நீ உதைப்பதை உணர்த்தியதால்
உறக்கமெனக்கு உயர்வாய் தெரிகிறது
நான் முழுமையடையும்முன்னே
முதுமையல்லவா முட்டிக்கொண்டு நிற்கிறது

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (14-Nov-17, 5:14 pm)
பார்வை : 148

மேலே