பாரதியார் பற்றிய நூல்கள் – 45

பாரதி இயல்



மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – Part 45

எஸ்.திருச்செல்வம் எழுதியுள்ள ‘மகாகவி பாரதி’



ச.நாகராஜன்

1

மஹாகவி பாரதியாரின் வாழ்க்கை வரலாறை ‘மகாகவி பாரதி (வரலாற்றுச் சுருக்கம்) பாரதி நூற்றாண்டு நினைவு வெளியீடு என்று அழகிய சிறு நூலாக வெளியிட்டுள்ளார் எஸ்.திருச்செல்வம் என்னும் பாரதி அன்பர்.

22 பக்கமே அடங்கியுள்ள சிறு நூல் தான் என்றாலும் சிறப்பான நூல். சீரிய முயற்சி.





இந்த நூலுக்கு பிரார்த்தனை உரையாக இலக்கிய கலாநிதி, பண்டிதமணி சி.கணபதிப் பிள்ளை அவர்கள் வழங்கிய அழகிய உரையில் சில பகுதிகள்:

“பாடாமல் இருக்க மாட்டாமை, பாரதியாருக்குப் பிறவிச் சொத்து. பாரதியாரின் இருதயம் பரிசுத்தமானது. அதில் ஒரு எண்ணம் குதிக்குமானால், அக்கணமே அவ்வெண்ணம் பாடல்களாய்க் குதிக்கும்.





பாடல்கள் பாலர் தொடக்கம் பண்டிதர்வரை யாரையும் இனிக்க வைப்பவை. பாடல்களைப் போலவே, வசனங்களும் புத்தம் புதியவை.

இந்த ஆண்டு பாரதி நூற்றாண்டு வானொலியிலும் பத்திரிகைகளிலும் அடிக்கடி பாரதியாரைத் தரிசிக்கின்றோம். இச் சந்தர்ப்பத்தில், அவருக்கு ஒரு வரலாறு எழுதி வெளியிடுவது பொருத்தம், வெகு பொருத்தம்.

‘மகாகவி பாரதி’ என்ற தலைப்பைக் கொண்ட இந்நூல், பாரதியார் வரலாற்றைத் தெளிவு பெற விளக்கஞ் செய்கின்றது. அவ்வளவிலமையாது, வேண்டிய இடங்களில் பாரதியாரின் இலக்கிய இரசனை சுரப்பதையும் ஒரு அளவுக்குத் தொட்டுக் காட்டுகின்றது. இவ்வாற்றான் இந்நூல் போற்றற்பபாலது”.

வெகு சுருக்கமாக நூலைப் பற்றிய முன்னுரை இது.



2

யாழ்ப்பாணத் தமிழர் 1982 டிசம்பரில் வெளியிட்டுள்ள இந்த நூல் பாரதியாரின் வரலாற்றை ஆரம்ப முதல் ஆண்டு வாரியாக முக்கிய விஷயங்களைத் தொட்டுக் காட்டி சிரத்தையோடு அமைக்கப்பட்டுள்ளது.

நூலின் சில பகுதிகள்:

பதினொரு வயதுப் பையனுக்கு “பாரதி” என்ற பட்டமா என்று தழிழறிந்தோர் ஆச்சரியப்பட்டனர்.

“காசி இந்துக் கல்லூரியில் கல்வி கற்கும் வாய்ப்பைப் பெற்று, மெட் ரிகுலேஷன் பரிட்சையிலும் சித்தி பெற்றார்.

இதனைத் தொடர்ந்து அலகபாத் சர்வகலாசாலையில் புது முகத் தேர்வுப் பரிட்சையில் முதன் நிலையில் சித்தி பெற்றார். வடமொழியுடன், இந்தியையும் கற்கும் சந்தர்ப்பமும் இவ்வேளையில் பாரதியாருக்குக் கிடைத்தது.

“1902-ம் ஆண்டு வரை இங்கு வசித்து வந்த பாரதியார், இருபது வயதுக்குரிய வாலிப மிடுக்குடன் திகழ்ந்தார். மீசை வளர்த்து, கச்சம், வால் விட்ட தலைப்பாகையும் அணியும் பழக்கம் இந்நாட்களிலேயே அவருக்கு ஏற்பட்டது.

1903-ம் ஆண்டில் எட்டயபுரம் மன்னரின் வேண்டுதலுக்கு இசைந்து, அரசவைக் கவிஞர் பதவியை ஏற்றுக் கொண்டார். ஆனாலும் நீண்ட காலம் இவர் இப்பதவியில் இருக்கவில்லை. ஆனாலும் ஒரு வருட காலம் மட்டுமே இப்பதவியை அவர் வகித்தார்.

இருபத்தொரு வயதிலேயே அரசவைக் கவிஞர் பதவியை வகித்த ப்ருமை பாரதியாருக்குக் கிடைத்தது.

“கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரபிள்ளையுடனும் தொடர்பு கொண்டதுடன் வங்கிக் கிளர்ச்சியிலும் நேரடியாகவே ஈடுபட்டார்.”



“1908-ம் ஆண்டு பாரதியாரின் முதலாவது கவிதை நூல் வெளியானது. “ஸ்வதேச கீதங்கள்” என்பது இந்நூலின் பெயர்.”



“1912-ம் ஆண்டே பாரதியாரின் வாழ்க்கையில் உழைப்பு மிக்க வருடமாகும். பகவத் கீதையை இவ்வாண்டிலேயே தமிழில் மொழி பெயர்த்தார்.

கண்ணன் பாட்டு, குயில் பாட்டு ஆகிய கவிதை நூல்களும் வெளியாகின. “பாஞ்சாலி சபதத்தின்” முதலாம் பகுதியும் அச்சேறியது.



“1918, நவம்பர் 20-ம் திகதி. புதுவையிலிருந்து புறப்பட்டு, பிரிட்டிஷ் எல்லையில் காலடி எடுத்து வைத்தபோது பாரதியார் கைது செய்யப்பட்டார்.”



“பாரதியாரை மாபெரும் கவிஞர் என்று மட்டுமே மக்கள் அறிவர்.

அவர் ஒரு சிறந்த கதாசிரியர், கட்டுரையாசிரியர், மேடைப் பேச்சாளர் என்பது பலருக்குத் தெரியாது.”



“பாரதியாரின் பேரர்கள், பூட்டர்கள் பலர் கனடா, கலிபோர்னியா, மலேஷியா, டோரண்டோ ஆகிய இடங்களில் இன்று தொழில் புரிகின்றார்கள்.”



“பாரதி வாழ்ந்த எட்டயபுரத்தில் 1948 செப்டம்பரில் மணிமண்டபம் கட்டப்பட்டது.”

1960 செப்டம்பர் 11-ம் திகதி பாரதியாரின் 78ஆவது பிறந்த தினத்தன்று அவரது முத்திரையை இந்திய அரசு வெளியிட்டுக் கௌரவித்தது.

அவரது கவிதைகள் பல ரஷ்ய, ஆங்கில, ஸ்பானிய, ஆர்மீனிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

சுமார் இருநூற்றுக்கதிகமான பாரதி தொடர்பான நூல்கள் தமிழகத்தில் கடந்த பன்னிரெண்டு மாதங்களிலும் வெளி வந்துள்ளன.



3

நூலில் 18வது பகுதியில் டாக்டர் திருமதி விஜயா பாரதியின் நூலில் உள்ள சில

முக்கியப் பகுதிகள் தரப்பட்டுள்ளன.

இந்தப் பகுதியில் விஜயா பாரதி அவர்கள் கீழ்க்கண்டவாறு பாரதியார் சுதேசமித்திரனில் சேர்ந்தது பற்றிக் கூறுகிறார்:

“பாரதியார் சுதேசமித்திரன் பத்திரிகையில் உதவியாசிரியராகச் சேர்ந்தது எவ்வாறு என்பது பற்றிப் பல கதைகள் அடிபடுகின்றன.

சுதேசமித்திரன் ஆசிரியராகவிருந்த ஜி.சுப்பிரமணிய ஐயர் மதுரைக்கு வந்த போது பாரதியாரின் திறமைகளை அறிந்து அவரை அழைத்துச் சென்றதாகச் சிலர் கூறுகின்றனர்.

பாரதியாரின் தூரத்து உறவினரான லட்சுமண ஐயர் என்பவர், பாரதியாரின் வேண்டுதலுக்கிணங்க சுதேசமித்திரனில் சேர்த்து விட்டதாக வேறு சிலர் சொல்கின்றனர்.

பாரதியார் தமது சகபாடியான அய்யசாமி அய்யரைக் கேட்டதற்கிணங்க, அவரது மாமாவான இராஜாராம அய்யர் (இந்து பத்திரிகை நிருபராகக் கடமையாற்றியவர்) உதவியால் வேலை கிடைத்ததாக மற்றும் சிலர் கூறுகிறார்கள்.”

மேற்படி பல தகவல்களில் எது உண்மை? இந்தத் தொடரில் 44ஆம் அத்தியாயத்தில் பண்டித வித்துவான் தி.இராமானுசன் எழுதியுள்ள‘வரகவி பாரதியார்’ என்ற நூலில் கோபாலகிருஷ்ணையர் என்பவர் ஜி.சுப்பிரமணிய ஐயரின் நண்பர் என்றும் அவரது உதவியினாலேயே பாரதியார் சுதேசமித்திரனின் சேர்ந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.

ஆக பல்வேறு செய்திகளில் எது உண்மை என்பதை தெளிவு படுத்திக் கொள்ள வேண்டிய நிலையில் தான் இன்றும் உள்ளோம்!





4

எஸ்.திருச்செல்வம் அவர்கள் மிகச் சுருக்கமாக, அழகாக பாரதியார் வரலாறை எழுதியுள்ளார்.

ஒரு குறிப்பிடத்தகுந்த முயற்சி இன்னும் மேற்கொள்ளப்படவில்லை.

பாரதியாரின் ஆதார பூர்வமான தேதியிட்ட வரலாறு இன்னும் வெளியிடப்படவில்லை.

சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றில் அவர் மேலை நாடு சென்றதிலிருந்து நாள் வாரியாக அவர் எங்கிருந்தார் என்ற அரிய நூல் வெளியிடப்பட்டிருப்பதை இங்கு நினைவு கூரலாம்.

அதே போல மகாகவியின் வாழ்க்கை வரலாறும் ஆதார பூர்வமாக தேதிவாரியாக வெளியிடப்பட்டால் பாரதி அன்பர்கள் அதைப் பெரிதும் வரவேற்பர்.

நூற்றாண்டு விழாவில் வெளி வந்த இந்தச் சிறு நூல் யாழ்ப்பாணத் தமிழர்களின் சிரத்தையும் அன்பும் கூடிய பாரதி பக்தியில் விளைந்த நல்ல மலர்.

பாரதி இயலுக்கு அணி சேர்க்கும் நூல்களில் இதுவும் ஒன்று!

இதை இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்

***



Share this:

எழுதியவர் : (22-Dec-17, 5:14 pm)
பார்வை : 569

மேலே