முதுமொழிக் காஞ்சி 1
குறள் வெண்செந்துறை
ஆர்கலி யுலகத்து மக்கட்கெல்லாம்
ஓதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை. 1 சிறந்த பத்து, முதுமொழிக் காஞ்சி
பொருளுரை: நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சிறந்த நூல்களைக் கற்பதைக் காட்டிலும் ஒழுக்கத்துடன் வாழ்வது சிறந்ததாகும்.
இதையே திருவள்ளுவர் ஒழுக்கமுடைமை அதிகாரத்தில்,
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும். 133
'அந்தணன் தான் கற்ற வேதத்தை மறந்து விட்டாலும், பின்னால் கற்றுக் கொள்ளலாம். ஒருவனது ஒழுக்கம் குறைந்தால் அவனது பிறப்பும் பரம்பரை ஒழுக்கமும் கெடும்' என்கிறார் திருவள்ளுவர். .